உ.பி.யில்.. ஆக்சிஜன் அளவு 16க்கு போன கொரோனா நோயாளி, 130 நாள் சிகிச்சைக்கு பிறகு நலமோடு டிஸ்சார்ஜ்!
டெல்லி: கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு 130 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் தற்போது நலமுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த விஸ்வாஸ் சைனி என்பவருக்கு கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி, கொரோனா பாஸிடிவ் என்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அப்போது இரண்டாவது அலை மிக மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

கடுமையான பாதிப்பு
மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிகள் இல்லாத நிலை கூட இருந்தது. இதற்கு நடுவேதான் மருத்துவர்கள் சைனி உயிரை காப்பாற்றுவதற்காக தீவிரமாக போராடி வந்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டால் வென்டிலேட்டர் உதவியுடன் சுமார் ஒரு மாதகாலம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.

ஆக்சிஜன் சப்ளை
ஒரு மாதம் கழித்து சற்று உடல்நிலை தேறியது. இதை தொடர்ந்து வெண்டிலேட்டர் நீக்கப்பட்டு அவருக்கு ஆக்சிஜன் சப்ளை வழங்கப்பட்டது. 130 நாட்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இது பற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மிக நீண்ட காலத்துக்கு பிறகு எனது வீட்டுக்கு நான் விரும்புகிறேன். மருத்துவமனையில் பல நோயாளிகள் உயிரிழந்ததை நேரில் பார்த்து மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் தைரியத்தை கைவிடக்கூடாது என்று ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்கள். அவர்களது ஊக்கமும் உற்சாகமும், சிறந்த சிகிச்சையும் தற்போது என்னை மீட்டு எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். பயப்படாமல் இருப்பதுதான் உயிரை காக்கும் வழி என்கிறார் இவர்.

ஓய்வு எடுக்க வேண்டும்
சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்ததால் இவருக்கு உரிய ஓய்வு தேவைப்படுகிறது. குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருப்பதும், உரிய ஓய்வு எடுப்பதும் அவரது உடல் நிலையை பழைய நிலைமைக்கு கொண்டு வர உதவும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

ஆக்சிஜன் சப்ளை
மருத்துவர்கள் இதுபற்றி கூறுகையில், விஸ்வாஸ் சைனி உடல்நிலை தற்போது சீராக உள்ளது, தற்போது அவருக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் ஆக்சிஜன் சிலிண்டர் தேவையில்லை. இருப்பினும், சில நேரங்களில் ஆக்ஸிஜன் சப்ளை இல்லாமல் நான்கு மணிநேரம் செலவழித்த பிறகு அவருக்கு மீண்டும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் 16 அளவு
சைனி சிகிச்சை பெற்ற, நியூடெமா மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் அவ்னீத் ராணா அளித்த பேட்டியில் "ஏப்ரல் 28 அன்று அவருக்கு கோவிட் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆரம்பத்தில், அவர் வீட்டில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது தெரியவந்தது. எனவே, பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சைனிக்கு, அட்மிட் செய்தபோது ஆக்ஸிஜன் அளவு 16 மட்டுமே இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அவரை வென்டிலேட்டரில் வைத்திருந்து சிகிச்சையளிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு அவர் தெரிவித்தார். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கு கீழே குறைந்தாலே அந்த நோயாளிக்கு சிறப்பு கவனம் எடுத்து பார்க்க வேண்டியுள்ள நிலையில், ஆக்சிஜன் அளவு இந்த அளவுக்கு குறைந்த நிலையிலும், விஸ்வாஸ் சைனி மீண்டு வர அவரது மனோதிடமும் ஒரு காரணம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications