"பிரிவின் வலி".. மகள்களை பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்.. நெட்டிசன்களை கலங்கடித்த வீடியோ
டெல்லி: டெல்லி பல்கலைக்கழகத்தில் தனது மகளை உயர்கல்விக்காக சேர்த்துவிட்டு திரும்பும்போது கண்ணீர் விட்டு அழுத தந்தையின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகிறது.
சிறு வயதில் பள்ளி செல்லும்போது அழும் குழந்தைகளுக்கு பெற்றோர் சமாதானம் செய்வதை போல தந்தைக்கு அவரது மகள் ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
பிரிவு
பால்ய வயதுகளில் பள்ளி செல்லும் குழந்தைகள் அடம் பிடித்து அழுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால் தற்போது வெளிவந்துள்ள இந்த வீடியோவில் தனது மகளை கல்லூரியில் சேர்த்துவிட்டு வீடு திரும்ப மனமில்லாமல் தந்தை ஒருவர் கதறி அழுதுள்ளது அனைவரிடத்திலும் சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு குடும்பமும் தனது பிள்ளைகளை பிரியும் போது துயரத்தில் துவண்டுவிடுகிறது. அதற்கு ஓர் உதாரணம்தான் இந்த வீடியோ என்று நெட்டிசன்கள் வீடியோ குறித்து கமென்ட் செய்துள்ளனர்.
உயர்கல்வி
வீடியோவில் தந்தை தனது மகள் பிரேக்ஷாவை டெல்லி பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுகிறார். முதல்நாளான அன்று அவர்கள் இருவரும் கல்வி நிலைய வளாகத்தை சுற்றி வருகின்றனர். அப்போது எடுத்த வீடியோவில் தனது மகள் தன்னைவிட்டு பிரிவதை ஏற்க முடியாத தந்தை துக்கத்தை மறந்து மகிழ்ச்சியாக இருக்க முயல்வது தெளிவாக தெரிகிறது. ஆனாலும் அவரால் துக்கத்தை மறைக்க முடியவில்லை. எனவே கண்ணீர் விட்டு அழுது விடுகிறார்.
மகிழ்ச்சி
இந்த விடியோவை பதிவேற்றிய மாணவி பிரேக்ஷா தனது தந்தை குறித்து, "எனது கனவு கல்லூரியான டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் என்னை அப்பா இறக்கி விட்டார். இது எனது முதல்நாள். எனவே நாங்கள் கல்லூரியை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென அவர் கண்களிலிருந்து கண்ணீர் வருவதை பார்த்தேன். என்னை விட்டு பிரியும் ஏக்கத்திலும், மகிழ்ச்சியிலும் அவர் ஆழ்ந்திருந்தார். இனி நாங்கள் வழக்கமாக சந்தித்துக்கொள்ள முடியாது.
பரவலாக பரவிய வீடியோ
அவர் என்னைவிட்டு நீண்ட தூரம் சென்றுவிடுவார். என்னுடைய முயற்சிக்கு பலனாக எனக்கு இந்த கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது. இந்த முயற்சிக்கு எனக்கு உதவிய அம்மா, அப்பா என இருவருக்கும் எனது நன்றி. நான் எப்போதும் உங்களை நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். அதேபோல 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். நெட்பிளிக்ஸ் தொடங்கி பிரபல சினிமா நட்சத்திரங்கள் வரை பலர் இந்த வீடியோ குறித்து தங்களது கருத்தை கூறியுள்ளனர்.