'ஒரே ஒரு ட்வீட்' - ஹர்பஜன் சிங்குக்கு அடித்த ஜாக்பாட் - ராஜ்யசபாவில் கெத்து காட்டப்போகும் ஆம் ஆத்மி!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி சார்பில், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ராஜ்யசபா எம்.பி-ஆக தேர்வு செய்யப்படவிருக்கிறார்.
Recommended Video

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து, ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருக்கிறது. டெல்லிக்கு அடுத்தபடியாக பஞ்சாபிலும் ஆம் ஆத்மி அரசு ஆட்சி செய்கிறது.
13 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரியவருகிறது.

ஹர்பஜன் சிங்
இந்நிலையில், பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது.
இதற்கு ஹர்பஜன் சிங், புதிய அரசைப் பாராட்டி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ராஜ்யசபா
ராஜ்யசபாவில் காலியாக உள்ள 13 உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் 31 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏழு மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். அதேபோல் கேரளா மாநிலத்தில் இருந்து 3 உறுப்பினர்களும், இமாச்சல பிரதேசத்தில் இருந்து ஒருவரும், அஸாம், மணிப்பூர் மாநிலங்களில் இருந்தும் ஒருவர் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் 7 உறுப்பினர் பதவிகளில், ஐந்து இடங்கள் தற்போது காலியாக உள்ளன. ஐந்து இடங்களுக்கும் வேட்பாளரை நியமித்து ஆம் ஆத்மி கட்சியால் வெற்றி பெற முடியும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இந்நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், டெல்லி எம்.எல்.ஏ ராகவ் சந்தா, ஐஐடி பேராசிரியர் சந்தீப் பதக், தொழிலதிபர் சந்தீப் அரோரா, பேராசிரியர் சந்தீப் மிட்டல் ஆகியோர் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றம்
ஆம் ஆத்மி கட்சி சார்பாக நாடாளுமன்ற மேலவைக்கு டெல்லியில் இருந்து மூன்று பேர் தேர்வாகி இருக்கிறார்கள். பஞ்சாபில் இருந்து பகவந்த் மான் மக்களவை உறுப்பினராக இருந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்றதால், தன்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பஞ்சாப் தேர்தலில் மிகப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதால், ராஜ்யசபாவிலும் ஆம் ஆத்மி கட்சி தங்களுடைய பலத்தைக் காட்டவிருக்கிறது.












Click it and Unblock the Notifications