மணீஷ் சிசோடியா வீடு மீது பாஜக அட்டாக்... ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு!
புதுடெல்லி: டெல்லி துணை முதல்-அமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினர் அவரது வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி கட்சி செய்திதொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.
பாஜகவினர் செயல் கண்டிக்கத்தக்கது என டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பாஜக திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு மாநகராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்த கோரி பாஜகவை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜனதா அதிகாரம் செலுத்தும் மாநகராட்சிகளின் மேயர்களை கொலை செய்ய டெல்லி துணை முதல்-அமைச்சர் மணீஷ் சிசோடியா, அக்கட்சி தலைவர்கள் சிலர் சதி செய்வதாக டெல்லி போலீசில் பாஜக புகார் கொடுத்தது.
இதற்கிடையே நேற்று மணீஷ் சிசோடியாவை கண்டித்து பாஜகவினர் அவரது வீட்டு அருகில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மணீஷ் சிசோடியாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் நிருபர்களிடம் கூறுகையில், துணை முதல்-அமைச்சரின் வீட்டுக்கு வெளியே போராடட்ம நடத்திய குண்டர்கள், சிசோடியாவின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தனர். ஆனால் அங்கு இருந்த போலீசார் இதனை தடுக்கவில்லை. வீட்டைச் சுற்றியுள்ள தடுப்புகளை கூட போலீசார் போராட்டகாரர்களுக்கு வசதியாக அகற்றிவிட்டனர் என்று கூறினார்.
மேலும், பாஜகவினர் வீட்டுக்குள் நுழைவது போன்ற வீடியோவையும் சவுரப் பரத்வாஜ் காண்பித்தார். பாஜகவினர் போராட்டம் நடத்தும்பொது மணீஷ் சிசோடியா வீட்டில் இல்லை என கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.












Click it and Unblock the Notifications