இதை யாரும் எதிர்பார்க்கலையே! "பொது சிவில் சட்டம்.."ஆதரவாக இறங்கிய கெஜ்ரிவால்! ஆம் ஆத்மி பரபர
டெல்லி: பொது சிவில் சட்டம் இப்போது மீண்டும் பேசு பொருள் ஆகியுள்ள நிலையில், அதனை ஆதரிப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே பொது சிவில் சட்டம் குறித்துத் தான் பேச்சாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது கிரிமினல் சார்ந்த வழக்குகளுக்கு ஒரே சட்டம் தான் நாடு முழுக்க பின்பற்றப்படுகிறது. இருப்பினும், சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது.
இந்த நிலையை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதையே பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இப்போது மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.

பொது சிவில் சட்டம்: சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகப் பேசினார். இரண்டு வகையான சட்டங்களை வைத்து நாட்டை நடத்த முடியாது என்று குறிப்பிட்ட அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் குறிப்பிட்டனர். இதனால் நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
அதேநேரம் பாஜகவின் நேர் எதிர் முகாமில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளது. பாஜகவால் டெல்லியில் ஆம் ஆத்மி பல்வேறு தொல்லைகளைச் சந்தித்து வருவதாக அக்கட்சியினரே கூறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆதரவு: ஆம் ஆத்மி அனைத்து இந்தியர்களுக்கும் ஒரே பொது சிவில் சட்டம் என்ற கொள்கையை ஆதரிக்கிறது என்றும் அதேநேரம் இதில் நடவடிக்கை எடுக்கும் முன்பு அனைத்து தரப்பினருடனும் பரந்த ஆலோசனையைச் செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. இது குறித்து ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சந்தீப் பதக் கூறுகையில், "கொள்கை அளவில் நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறோம். அரசியலமைப்பின் 44வது பிரிவும் அதையே தான் வலியுறுத்துகிறது.
ஆனால் இது அனைத்து மதங்களையும் தொடர்புடையது என்பதால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் முன்பு, பரந்த அளவில் ஆலோசனை நடத்த வேண்டும். ஒருமித்த கருத்து உருவான பிறகு இதில் அடுத்தகட்ட நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும். நீங்கள் அரசியலமைப்பின் 44வது பிரிவை எடுத்துப் பார்த்தீர்கள் என்றாலும், நாட்டிலும் அது பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாகவே இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
என்ன காரணம்: டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே உச்சக்கட்ட மோதல் நிலவி வருகிறது. இருந்த போதிலும், இந்த பொது சிவில் சட்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி தொடக்கம் முதலே ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை ஆதரித்து கருத்து கூறியிருந்த நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. அதேபோல முஸ்லீம் அமைப்புகளும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன. பிரதமரின் இந்த கருத்தைத் தொடர்ந்து இது குறித்து ஆலோசிக்க அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் நேற்றிரவு அவசரக் கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications