"அபார்ஷன்".. 24 வாரம் வரை கருக்கலைப்பு.. உச்சவரம்பை நீட்டித்து, புதிய விதிகளை அறிவித்தது மத்திய அரசு
கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது
டெல்லி: பாலியல் பலாத்காரம், விதவைகள், உடல் குறைபாடு உள்ளோர், உட்பட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, கருக்கலைப்புக்கான உச்சவரம்பை 20 முதல் 24 வாரங்களாக மாற்றுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன், இதுபோன்றவர்களை பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ வாரியம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எளிதாக யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், கர்ப்பிணிகளுக்கு அபார்ஷன்களை செய்து கொண்டிருந்தார்கள்..
கிராமப்புறங்களில் நன்கு அனுபவம் பெற்ற மருத்துவச்சிகள் அல்லது அனுபவம் மிக்க பாட்டிகள் இத்தகைய கருக்கலைப்பை அன்றைய காலங்களில் வீடுகளிலேயே செய்வார்கள்.. மருத்துவச்சிகளின் முறைதான் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது.. மருத்துவச்சிகளால் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை.
கருக்கலைப்பு சட்டத்தில் அதிரடி மாற்றம்.. பெண்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது
அபார்ஷன்கள்
ஆனால், போலி மருத்துவர்களும் அபார்ஷன்களை செய்ய தொடங்கினர்.. இந்த முறையில்லாத மருத்துவம் காரணமாக நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன.. அதைவிட கொடுமை என்னவென்றால், கர்ப்பப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு அதனால் இறந்த அநியாய மரணங்கள்தான் அதிகமாக இருந்தன. அதிலும் சிசுவும், தாயும் சேர்ந்த மரணங்கள் அதிகமாகவும்தான், இதற்காகவே ஒரு சட்டத்திருத்தம் நீண்ட காலமாகவே இந்தியாவில் வலியுறுத்தப்பட்டு வந்தது.
பாதுகாப்பு
அப்படித்தான், பெண்கள் பாதுகாப்பாக அபார்ஷன் செய்துகொள்ளும் உதவியை அடையும் பொருட்டு, முதல் சட்ட திருத்தம் 2002-ல் கொண்டு வரப்பட்டது... அதேபோல, மருத்துவ தகுதி இல்லாமல் அபார்ஷன் செய்பவர்களுக்கு தண்டனை மற்றும் அபராதம் கடுமையாக்கப்பட்டது. கருக்கலைப்பு செய்ய உச்சவரம்பு 20 வாரங்கள் இருந்த நிலையில், அதற்கான கால அவகாசத்தையும் நீட்டித்து கோரிக்கைகள் எழுந்தன..
கருக்கலைப்பு
அந்த வகையில், 2020 ஜனவரி 29-ம்தேதி மத்திய அரசு, கருக்கலைப்பு செய்வதற்கான உச்சவரம்பை, ஏற்கெனவே வழக்கத்தில் இருக்கும் 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் தந்திருந்தது. பெண்களுக்கு தங்கள் விருப்பப்படி குழந்தை பெற்றுக்கொள்ளும் இனப்பெருக்கம் சார்ந்த சுதந்திரத்தை இந்த சட்டம் அளிக்கும் என்று அப்போது மத்திய அரசு சொன்னது.
உச்சவரம்பு
அதாவது, இந்த சட்டத்தின்படி, பதிவு பெற்ற அரசு டாக்டர்தான் அபார்ஷன் செய்ய முடியும்... 12 வாரங்களுக்குள் என்றால் ஒரு டாக்டரே முடிவு செய்து அபார்ஷன் செய்யலாம்.. 12 முதல் 20 வாரங்களாக இருந்தால் 2 டாக்டர்கள் சேர்ந்துதான், அதை பற்றி முடிவு செய்ய வேண்டும்... இந்த விதிதான் தற்போது அமலில் உள்ளது.. இதனிடையே, ஏராளமான காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அபார்ஷன் செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்டத்திருத்தம், பார்லிமென்டில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது...
அறிவிப்புகள்
அதன்படி, குறிப்பிட்ட வகையை சேர்ந்தோருக்கு கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான அனுமதிதான், தற்போது 20 முதல் 24 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.. இது தொடர்பாக மத்திய அரசு சில புதிய விதிகளையும் அறிவித்துள்ளது.. அந்த அறிவிப்புகள் இவைதான்:
பாலியல் பலாத்காரம்
"பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டோர், விதவைகள், உடலில் குறைபாடுகள் உள்ளவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர், 24 வாரம் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கப்படுவார்கள்.. அதேபோல் 24 வார கரு வளர்ச்சி அடைந்த நிலையில், கருவுற்ற பெண்ணுக்கு மோசமான பாதிப்புகள் உடலில் கட்டாயம் ஏற்படும் என்பது உறுதியாக தெரிந்தாலும் அபார்ஷன் செய்யலாம்.
மருத்துவ வாரியம்
மேலும், கருவில் உள்ள சிசுக்கள் முழு வளர்ச்சி பெறாமல், மாற்றுத்திறனாளிகளாக பிறக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்பட்டாலும், அதையும் அபார்ஷன் செய்ய அனுமதி வழங்கப்படும்.. காலம் கடந்த நிலையில் கருச்சிதைவு ஏற்பட்டு, கர்ப்பிணிக்கு பாதிப்பு நேரலாம் என்று உறுதி செய்யப்பட்டாலும் அவர்களுக்கு அபார்ஷன் செய்யலாம்.. இதுபோன்றவர்களை முழுமையாக பரிசோதித்து கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கும் பணியை மேற்கொள்ள, மாநில அளவில் மருத்துவ வாரியம் அமைக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.