ரூ.200 கோடி மோசடி வழக்கு.. சிக்குகிறாரா பாகுபலி நடிகை? தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை!
டெல்லி: சுகேஷ் சந்திரசேகர் வழக்கு தொடர்பாக பாகுபலி நடிகை நோரா ஃபடேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து 7 மணி நேரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்ததில் இருந்து பாலிவுட் திரையுலகம் பாய்காட் ட்ரெண்டிங்கில் சிக்கி சின்னாபின்னாமாகி வரும் நிலையில், ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் ரீமேக்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த திண்டாட்டம் ஒரு பக்கம் இருக்க, இரட்டை இலை சின்ன வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் வழக்கால் இன்னொரு பக்கம் திண்டாடி வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட சிவிந்தர் சிங்கை சிறையில் இருந்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, சிவிந்தர் சிங் மனைவி ஆதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் சுமார் ரூ.200 கோடியை மோசடி செய்ததாக ஆதிதி சிங் குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி லீனா ஆகியோரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் சுகேஷ் சந்திரசேகருக்கு பாலிவுவ்ட்டின் பிரபல நடிகைகளான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபடேஹியுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றவாளி ஜாக்குலிடன் பெர்னாண்டஸ்?
குறிப்பாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்-க்கு விலை உயர்ந்த பூனை, குதிரை, கார், வைரம் என ரூ.7 கோடிக்கும் அதிகமாக பரிசுப்பொருள்களை சுகேஷ் சந்திரசேகர் வழங்கி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு தொடர்பான முதல் குற்றப்பத்திரிகையில் நடிகைகள் இருவரும் சாட்சிகளாக மட்டுமே சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இரண்டாது துணை குற்றப்பத்திரிகையில் ஜாக்குலின் பெர்னாண்டஸை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

பாகுபலி நடிகையிடம் விசாரணை
இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகுபலி, தோழா உள்ளிட்ட படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடிய நடிகையான நோரா ஃபடேஹியிடம் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையின் போது சுகேஷ் சந்திரசேகர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

கார் பரிசு?
ஏற்கனவே நடந்த விசாரணையில், சுகேஷ் சந்திரசேகரிடம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின் பேசவில்லை என்று நடிகை நோரா கூறி இருந்தார். அதேபோல் சுகேஷ் வழங்கிய காரை வாங்க மறுத்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் நடிகை நோராவிடம் நேரடியாக கார் பரிசளித்ததாக சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

7 மணி நேர விசாரணை
இதனால் டெல்லி போலீசார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஏற்கனவே நோராவிடம் நடத்தப்பட்ட விசாரணை விபரங்களை மீண்டும் அதிகாரிகள் கேட்டு உறுதி செய்து கொண்டனர். அடுத்த வாரத்தில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications