வேகமெடுத்த ஜேஎன்.1 கொரோனா வைரஸ்.. கேரளாவை தொடர்ந்து கோவா, மகாராஷ்டிராவிலும் உறுதியான பாதிப்பு
டெல்லி: இந்தியாவில் இன்று ஒரே நாளில் ஜேஎன்.1 வகையை சேர்ந்த கொரோனா வைரஸால் கேரளா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட 3 மாநிலங்களில் மொத்தம் 20 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2019ல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் லட்சக்கணக்கானவர்கள் பலியாகினர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இறுதியாக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. அதோடு மக்களும் நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றனர்.
இதனால் கொரோனா பாதிப்பு என்பது படிப்படியாக 2021ல் குறைய தொடங்கியது. இதையடுத்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் தான் தற்போது திடீரென்று இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றைய தினம் ஒரே நாளில் இந்தியாவில் 614 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது கடந்த மே மாதம் 21ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பதிவான அதிகபட்ச கொரோனா பாதிப்பாகும். மேலும் தற்போது இந்தியாவில் 2,311 பேர் கொரேனா சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதோடு இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இடம்பெற்றிருந்தது. அதாவது இன்றைய தினம் இந்தியாவில் 3 மாநிலங்களை சேர்ந்த 20 பேர் ஜேஎன்.1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கோவாவில் 18 பேர், கேரளா, மகாராஷ்டிராவில் தலா ஒருவர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் என்பது வேகமாக பரவும் தன்மை கொண்டது. கேரளாவில் கொரோனா அதிகரிக்க இந்த வைரஸ் தான் காரணம் என கூறப்பட்டுள்ள நிலையில் கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய சுகாதார அமைச்சகம் அனைத்து மாநிலங்களையும் எச்சரிக்கை செய்துள்ளது.
இதனால் ஜேஎன்.1 கொரோனா பாதிப்பை கண்டறிய பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது. அதோடு இன்றைய தினம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையில் கொரோனா பாதிப்பு குறித்தும், அதனை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பாகவும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கொரோனா பரவினால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் குறித்து விவாதிக்கப்ட்டது.












Click it and Unblock the Notifications