போராட்டம் வெடிக்குமென சற்றும் எதிர்பார்க்கல! அக்னிபாத் திட்ட குழுவில் இருந்த கடற்படை தளபதி வருத்தம்
டெல்லி: அக்னிபாத் திட்டம் தொடர்பான திட்டமிடல் குழுவில் நான் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். இப்போது திட்டம் முழுமை பெற்று அறிமுகமாக உள்ளது. இந்த வேளையில் இத்தகைய போராட்டங்களை எதிர்பார்க்கவில்லை'' என பல்வேறு விஷயங்களை கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறியுள்ளார்.
இந்திய பாதுகாப்பு துறையில் அக்னிபாத் எனும் திட்டம் அறிமுகமாக உள்ளது. இதன்மூலம் குறுகிய கால பணியாக 4 ஆண்டுகள் வரை இளைஞர்கள் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் பணியாற்ற முடியும்.
இந்த திட்டத்துக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இத்திட்டத்தை கைவிட்டு இதற்கு முன்பு இருந்தபடியே முப்படைகளிலும் ஆள்சேர்ப்பு நடவடிக்கை வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெடித்த போராட்டங்கள்
இந்தியாவில் வடமாநிலங்களில் இந்த திட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இளைஞர்கள் ஆக்ரோஷமாக போராடி வருகின்றனர். குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம், அரியானா, மேற்குவங்கம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள், சாலை, ரயில் மறியல் தொடர்ந்து நடக்கின்றன.

தீவைப்பு- வன்முறை
பீகார், உத்தர பிரதேசங்களில் ரயில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வன்முறையானது. பல இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் டயர்களை போட்டு தீவைத்து போராட்டக்காரர்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றன. போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர். பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் செகந்திராபாத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் ஒருவர் பலியாகி உள்ளார். 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மத்திய அரசு கைவிட மறுப்பு
ஆனாலும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கைவிடப்போவதாக இல்லை. போராட்டங்களுக்கு மத்தியில் அக்னிபாத் திட்டத்தில் இணைவோருக்கான வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்கு பிறகு வயது வரம்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதால் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது தெரியவந்துள்ளது.

கடற்படை தளபதி சொன்னது என்ன?
இந்நிலையில் அக்னிபாத் திட்டம் பற்றி கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறுகையில், ‛‛அக்னிபாத் திட்டம் தொடர்பான துவக்ககால திட்டமிடல் குழுவில் நான் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினேன். இப்போது இந்தி திட்டம் முழுமை பெற்று அறிமுகமாக உள்ளது. இதுபோன்ற போராட்டங்களை நான் எதிர்பார்க்கவில்லை. போராட்டம் நடத்துபவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்பதை கூற விரும்புகிறேன். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அக்னிபாத் திட்டம் குறித்து படித்து புரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் என்பது தேசத்துக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பாகும். அக்னிபாத் திட்டம் இந்தியாவுக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்'' என்றார்.












Click it and Unblock the Notifications