அதிமுக வழக்கு: பிப்ரவரியில் தீர்ப்பு- உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு விரிவான பதில் மனுத் தாக்கல்!
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றமானது பிப்ரவரி மாதம் தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
அதிமுக இபிஎஸ், ஓபிஎஸ் என இரு கோஷ்டிகளாக பிளவுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இபிஎஸ் கோஷ்டி கடந்த ஆண்டு ஜூலை 11-ல் சென்னையில் பொதுக்குழுவைக் கூட்டியது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதலில் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. பின்னர் இபிஎஸ் தரப்புக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இதனால் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் இருதரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்து வாதிட்டனர். உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 3-ந் தேதி முதல் தொடர்ச்சியான வாதங்கள் நடைபெற்றன. ஓபிஎஸ் தரப்பில், இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளர் அல்ல; ஒருங்கிணைப்பாளர்- இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உயிர்ப்புடன் உள்ளது என வாதிட்டது. இவ்வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இபிஎஸ் தரப்பைப் பொறுத்தவரை, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில்தான் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
அதிமுக பொதுக்குழு வழக்கில் பிப்ரவரியில் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புகள் ஜனவரி 16-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனடிப்படையில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு தமது வாதங்களை தாக்கல் செய்திருக்கிறது. இபிஎஸ் தரப்பு 39 பக்கங்களில் பல சட்டப் பிரிவுகள், ஆதாரங்களை சுட்டிக்காட்டி விரிவான மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications