222 கி.மீ வேகத்தில் ரன்வேயில் ஓடிய விமானம்.. குறுக்கே வந்த ஜீப்.. பைலட் செம.. புனேவில் பரபரப்பு
டெல்லி: 222 கிலோமீட்டர் வேகத்தில் ரன்வேயில் விமானம் ஓடிக் கொண்டிருந்தபோது, குறுக்கே ஒரு ஜீப் வந்தால்.. கூடவே ஒரு மனிதனும் நடந்து வந்தால்.. அடுத்து என்ன நடக்கும்? புனே விமான நிலையத்தில் என்ன நடந்ததோ அதுதான் நடக்கும். ஒருவேளை இதைவிட மோசமான சம்பவம் நடந்திருக்க கூடும். ஆனால் பைலட் தனது சாமர்த்தியத்தால் பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார்.
ஏர்பஸ் ஏ-321 வகையை சேர்ந்த ஏர் இந்தியா விமானம், இன்று காலை, புனே நகரிலிருந்து, டெல்லிக்கு புறப்பட்டது. அதில் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இருந்தனர். ரன்வேயில் அந்த விமானம் ஓடத் தொடங்கியது. படிப்படியாக பைலட் அதன் வேகத்தை அதிகரித்தபடி இருந்தார்.

ஒருகட்டத்தில் விமானம் 222 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது. அப்போதுதான், பைலட் ஒரு விஷயத்தை கவனித்தார். ரன்வே பகுதியில், ஒரு ஜீப் நின்று கொண்டிருந்தது. கூடவே ஒரு நபரும் இருந்தார். அதிர்ச்சியடைந்தார் பைலட். உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முடியாது என்பதை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட பைலட், உடனடியாக விமானத்தை டேக்-ஆப் செய்தார்.
குறிப்பிட்ட தூரம் வரை ரன்வேயில் ஓடி முடிக்கும் முன்பாகவே, டேக் ஆப் செய்துவிட்டார் பைலட். இதனால், விமானத்தின் வால் பகுதி, தரையில் பட்டுள்ளது. இதனால் விமான உடல்பாகம் சேதமடைந்துள்ளது. அப்படியும், வேறு பிரச்சினைகள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட பைலட், அப்படியே டெல்லி வரை விமானத்தை இயக்கி பயணிகளை பத்திரமாக சேர்த்துவிட்டார்.
இந்த சம்பவத்தை இப்போது விமான ஒழுங்குமுறை, சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டிஜிசிஏ) விசாரித்து வருகிறது. புனே விமான நிலையம் ஒரு இந்திய விமானப்படை விமானநிலையமாகும். நாட்டின் பல விமான நிலையங்களைப் போலவே, இங்கும் ராணுவ வீரர்கள், வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதேபோலத்தான் ராணுவ வீரர்கள் ஜீப்புடன் ரன்வேக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் பதிவைப் பாதுகாக்குமாறு டி.ஜி.சி.ஏ இந்திய விமானப்படையை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications