’அது’ தாலிபான் மனநிலை! இந்திய முஸ்லீம்கள் ஏத்துக்க மாட்டோம்! அதிரடியாக சொன்ன ஆஜ்மீர் தர்கா தலைவர்!
டெல்லி : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட டெய்லர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் தாலிபான் மனநிலை ஓங்க அனுமதிக்க மாட்டோம் என ஆஜ்மீர் தர்காவின் தலைவர் தீவான் ஜைனுல் ஆப்தீன் அலி கான் கூறியுள்ளதோடு, குற்றம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
உதய்பூர் தன்மண்டி பகுதியில் தையல் கடை வைத்திருப்பவர் கன்னையா லால். இவர் அண்மையில் இஸ்லாம் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன்பேரில் அவரை உள்ளூர் போலீஸார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

உதய்பூர் கொடூரம்
இந்த நிலையில், கன்னையா லாலின் கடைக்கு செவ்வாய்க்கிழமை 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் கன்னையா லாலின் கழுத்தை கூர்மையான ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்தார். அவர் கொலை செய்யப்பட்டதை மற்றொருவர் கைப்பேசியில் படம் பிடித்து அந்த விடியோவை உடனடியாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதில், இஸ்லாத்தை அவமதித்த காரணத்தால் கன்னையா லாலை பழிதீர்த்தாக அவர்கள் குறிப்பிட்டனர்.

பிரதமருக்கு மிரட்டல்
மேலும், பிரதமர் மோடிக்கும். பாஜகவிலிருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மாவுக்கும் அவர்கள் மிரட்டல் விடுத்தனர். இந்தப் படத்தை பரவலாகப் பகிரவும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். தையல்காரர் கொலை செய்யப்பட்டதை அறிந்த உதய்பூர் வியாபாரிகள், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தாலிபான் மனநிலை
இந்நிலையில் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் தாலிபான் மனநிலை ஓங்க அனுமதிக்க மாட்டோம் என ஆஜ்மீர் தர்காவின் தலைவர் தீவான் ஜைனுல் ஆப்தீன் அலி கான் கூறியுள்ளதோடு, குற்றம் இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடபாக பேசியுள்ள அவர்," எந்த மதமும் மனிதகுலத்திற்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதில்லை. குறிப்பாக, இஸ்லாம் மதத்தில், அனைத்து போதனைகளும் அமைதிக்கான ஆதாரங்களாக செயல்படுகின்றன

முஸ்லீம்கள் அனுமதிக்க மாட்டோம்
இணையத்தில் வெளிவந்த கொடூரமான வீடியோவில், சில நெறிமுறையற்ற மனங்கள் ஒரு ஏழையின் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது, இது இஸ்லாமிய உலகில் தண்டனைக்குரிய பாவம் ஆகும். மேலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன். நமது தாய்நாட்டில் தாலிபானிச மனப்பான்மையை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் தாய்நாட்டை பாதுகாப்போம்" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications