டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு உறுதி
டெல்லி: ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் எனவும் அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள் 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 முதல் 18 வயதினருக்கு விரைவில் சைடஸ் கடிலா நிறுவனத்தின் தடுப்பூசி கிடைக்கும் என்றும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா கொடுந்தொற்று காலத்தில் அத்தியாவசிய மருந்துப்பொருட்கள் வினியோகம், சேவைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

மத்திய அரசு உறுதி
இந்த வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி சார்பில் 380 பக்கங்கள் கொண்ட விரிவான பிரமாணபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசிக்கான தேசிய திட்டத்தை மத்திய அரசு மே மாதம் தொடங்கி தொடர்ந்து மீளாய்வு செய்து வருகிறது.

18 வயதானவர்களுக்கு
கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான ஜூன் 21ஆம் தேதி அன்றைய திருத்தப்பட்ட வழிகாட்டுதலின்படி, நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளின் 75 சதவீதத்தை மத்திய அரசு வாங்கி அதை மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் 18 வயதானவர்களுக்கு இலவசமாக செலுத்தப்படும்.

ஜனவரி முதல் ஜூலை வரை
தற்போதைய நிலையில் மத்திய அரசு மொத்தம் 35.6 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது. மே முதல் ஜூலை மாத வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் மேலும் கூடுதலாக 16 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். இதன்படி ஜனவரி முதல் ஜூலை வரை 51.6 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்.

94 கோடி பேர்
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் சுமார் 94 கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு 2 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்த 186 முதல் 188 கோடி வரையிலான தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

அனைவருக்கும் தடுப்பூசி
ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் மேலும் 135 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும். அவற்றைக் கொண்டு இந்த ஆண்டு டிசம்பருக்குள், 18 வயதான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தமுடியும். கொரோனா தடுப்பூசிகளை செலுத்த மத்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications