‛அசானி‛ புயல் நாளை உருவாகிறது! அந்தமானை தாக்க வாய்ப்பு.. பலத்த மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
டெல்லி: அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது. இதையொட்டி இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது.
Recommended Video
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகையையொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவி நகர துவங்கியது.
இது புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் இது 2022ம் ஆண்டின் முதல் புயல் எனவும் தெரிவித்து இருந்தது.

‛அசானி’ புயல்
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு "அசானி" என பெயரிடப்பட்டுள்ளது.

கனமழை
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் புயல் உருவாவதையொட்டி அந்தமான் தீவுகளில் இன்று மித முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் நாளை அந்தமான் தீவுகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த கனமழையும், நிகோபர் தீவுகளில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.நாளை உருவாகும் இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம், வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் மார்ச் 22ல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது.

தற்காலிக முகாம்
இதுதவிர அந்தமான் நிகோபா் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக அங்குள்ள அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை மறுநாள் வரை மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே அந்தமான் நிர்வாகம் சார்பில் தற்காலிக முகாம் அமைக்கப்பட்டுள்ளன. உணவு, தண்ணீர் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தமானின் தலைமைச் செயலாளர் ஜிதேந்திர நரேன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications