எல்லாம் வெளிநாட்டு சதி.. தூத்துக்குடியில் நிச்சயம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் - அனில் அகர்வால் உறுதி
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மூடப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும், மீண்டும் அங்கு ஆலையை இயங்க வைப்போம் என்றும் வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 13 பேரை காவல் துறை சுட்டுக்கொன்றது நாட்டையே அதிர வைத்தது.
நிலக்கரி தட்டுப்பாடு...தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 3 யூனிட்களில் உற்பத்தி நிறுத்தம்
அனிக் அகர்வால் உறுதி
இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2013 ஆம் ஆண்டு தடை விதித்தது. இதனை எதிர்த்து வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தனியார் இதழுக்கு பேட்டியளித்த வேதாந்தா குழும தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் நிச்சயம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்போம் என உறுதியளித்துள்ளார்.
வெளிநாட்டு சதி
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டங்கள் வெளிநாட்டு தூண்டுதலின் பேரில் நடைபெற்றது. இந்தியாவில் காப்பர் தயாரிக்கப்படுவதை விரும்பாத வெளிநாட்டு சக்திகள் இந்த போராட்டத்தில் தூண்டி விட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். நாங்கள் அவர்களை நம்புகிறோம்.
முன்வரும் மாநிலங்கள்
தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை இடமாற்றம் செய்வதற்கு பல மாநிலங்கள் எங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். தூத்துக்குடியில் எங்கள் நிறுவனம் பெருமளவில் வேலை வாய்ப்பை வழங்கி வந்தது. இதுவரை ஒருவரை கூட நாங்கள் பணி நீக்கம் செய்யவில்லை. உச்சநீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும். நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.
ஆர்வம் காட்டும் ஆந்திரா
ஆந்திரா போன்ற கடலோர மாநிலங்கள் ஆலைகளை தொடங்க அழைப்பு விடுத்து இருக்கின்றன. ஆனால், அவசரகெதியில் எந்த முடிவையும் எடுக்க விருப்பமில்லை. எங்களால் வேறு மாநிலத்துக்கு செல்ல முடியும். ஆனால், தூத்துக்குடியில் 20 ஆண்டுகளாக நாங்கள் இருக்கிறோம். அந்த மக்களை எங்களுக்கு பிடிக்கும். தூத்துக்குடி மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது." என்றார்.
ரூ.4,000 கோடி இழப்பு
வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மட்டும் ரூ.3,000 கோடியை முதலீடு செய்தது. 2018 ஆம் ஆண்டு முதல் ஆலை மூடப்பட்டு கிடப்பதால் ரூ.4,000 கோடி ரூபாய் வேதாந்தா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த ஆலையின் மூலமாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4,397 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். 17,000 பேர் மறைமுகமாக வேலை பெற்றனர்.