அனில் அம்பானி நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி வரி "ஆடி தள்ளுபடி".. அதிர வைக்கும் பரபர தகவல்கள்!
டெல்லி: பிரதமர் மோடி ரஃபேல் விமானத்திற்காக ஒப்பந்தம் போட்ட காலத்தில் அனில் அம்பானியின் பிரான்ஸ் நாட்டு நிறுவனமான ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் என்ற நிறுவனத்திற்கு 1124 கோடி ரூபாய் வரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் பிரபல ஊடகமான லீ மாண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இதை அனில் அம்பானியின் நிறுவனம் மறுத்துள்ளது.
ரஃபேல் விமான பேர ஊழலில் பாஜக அரசு விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் விமான துறையில் அனுபவமே இல்லாத அனில் அம்பானி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் செயல்பட்டுவரும் அனில் அம்பானியின் ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் என்ற நிறுவனம் 2007 ம் ஆண்டு முதல் 2012 ம் ஆண்டு வரை ரூ.1182 கோடி வரை வரி செலுத்தாமல் பிரான்ஸ் நாட்டை டபாய்த்துள்ளது. இதை பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மோடியின் ஹெலிகாப்டரில் மர்ம பெட்டி.. வேகமாக தூக்கிக்கொண்டு ஓடிய வெடிகுண்டு நிபுணர்கள்.. திக் வீடியோ
அனில் அம்பானியின் ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் நிறுவனத்தின் மீது இப்படி விசாரணை நடந்து கொண்டிருந்த அந்த கால கட்டத்தில் அதாவது 2015 ம் ஆண்டு ஏப்ரல் 13 ம் நாள் இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இடுகிறார். இந்த ஒப்பந்தத்தின்படி ரிலையன்ஸ் டிஃபென்ஸ், மற்றும் பிரான்சின் டசால்ட் ஆகிய நிறுவனங்கள் கூட்டு நிறுவனங்களாகின்றன. இதில் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் அப்போதுதான் புதிதாக உருவாக்கப்படுகிறது.
இது இந்திய தொழில் அதிபர் அனில் அம்பானியின் நிறுவனம். இந்தியா வாங்க உள்ள ரஃபேல் போர் விமானங்களை தயாரிப்பதற்கு அனில் அம்பானியின் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட காலத்தில் பிரான்ஸ் அரசு அந்த நிறுவனம் தனது நாட்டுக்கு செலுத்த வேண்டிய 1182 கோடி ரூபாயில் 1124 கோடி ரூபாயை தள்ளுபடி செய்துள்ளது. தள்ளுபடி செய்தது போக மீதமுள்ள 57 கோடி ரூபாயை வரியாக ஃபிளாக் அட்லாண்டிக் பிரான்ஸ் செலுத்தியுள்ளது என்று பிரான்ஸ் நாட்டு ஊடகமான லீ மாண்டோ செய்தி வெளியிட்டுள்ளது.
ரஃபேல் போர் விமானம் வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் இந்திய பிரதமர் மோடி கையெழுத்து இட்ட காலத்தில் இந்த விமானம் உற்பத்தி செய்ய தேர்வு செய்யப்பட நிறுவனமான ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனத்திற்கு ஆடித் தள்ளுபடியில் துணிக்கடையில் வழங்குவது போன்ற தள்ளுபடி வழங்கப்பட்டிருப்பது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் ரஃபேல் போர் விமான ஊழல் சர்ச்சையில் மேலும் எண்ணையை ஊற்றியது போல் உள்ளது. ஆனால் லீ மாண்டோ ஊடகத்தின் குற்றசாட்டை அனில் அம்பானியின் நிறுவனம் மறுத்துள்ளது.