இளம்பெண் அங்கிதா கொலை.. சிக்கலில் பாஜக தலைவர் மகன்.. திடீரென கட்டிடம் இடிப்பு.. ப.சிதம்பரம் சந்தேகம்
டெல்லி: உத்தரகாண்டில் அங்கிதா பணியாற்றிய சொகுசு விடுதியை இடித்து தள்ளிய உத்தரகாண்ட் அதிகாரிகள், தற்போது சொகுசு விடுதியை இடிக்க உத்தரவிட்டது யார் என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர் என விமர்சனம் செய்து ப சிதம்பரம் ட்விட் பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யா.
இவருக்கு சொந்தமாக அங்குள்ள பவுரி மாவட்டத்தில் ரிஷிகேஷ் அருகே தங்கும் சொகுசு விடுதி ஒன்று உள்ளது.
எய்ம்ஸ் கட்டிட்டீங்களா? ஏன் ஆபரேஷன் நடக்குதுனு கூட சொல்லுங்களேன்! பாஜகவை கலாய்த்த ப சிதம்பரம்
இளம்பெண் திடீர் மாயம்
இந்த விடுதியில் வரவேற்பாளராக அங்கிதா பண்டார் என்ற 19-வயது பெண் பணியாற்றி வந்தார். இவர் திடீரென மாயமாகிவிட்டதாக குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்தி வந்தனர். இதற்கு இடையில் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் விசாரணை சரியாக நடப்பதில்லை என போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து விசாரணையை போலீசார் முடுக்கி விட்டனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இதன்படி, ரிசார் உரிமையாளர் புல்கிட் ஆர்யா மற்றும் மேலாளர் சவுரா பாஸ்கர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, பாலியல் தேவைக்கு பயன்படுத்த முயற்சித்ததாகவும் அதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததும் தெரியவந்தது. அங்கிதாவின் உடலும் ரிசார்ட் அருகே உள்ள கால்வாயில் மீட்கப்பட்டது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. புல்கிட் ஆர்யா உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரிசார்ட்டை இடிக்க..
இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உத்தரகாண்டில் பல இடங்களில் போராட்டம் வலுத்தது. இதற்கிடையில், புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமான ரிசார்ட்டை இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதன்படி ரிசார் இடித்து தள்ளப்பட்டது. விசாரணை நடைபெற்று இருக்கும் போது ரிசார்ட் இடிக்கப்படுவது வழக்கின் தடயங்களை அழிப்பது போல் ஆகிவிடுதா? என பலரும் கண்டனக்குரல்கள் எழுப்பினர்.
விசாரணை நடத்தப்படும்
இதற்கு மத்தியில் சொகுசு விடுதியை இடிக்க நான் உத்தரவிடவில்லை என்று பவுரி கர்வால் மாவட்ட கலெக்டர் கைவிரித்தார். மேலும் பல விசாரணை அமைப்புகள் இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும் எனவே, இடித்து தள்ள உத்தரவிட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். போலீசாரும் ரிசார்ட்டை இடிக்க உத்தரவிடவில்லை என்றார்.
ப சிதம்பரம் விமர்சனம்
சொகுசு விடுதி இடிக்கப்பட்டதால் வழக்கின் முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டு இருப்பதாக அங்கிதாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி இருந்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டரில் இது தொடர்பாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
நாமே கணித்து விடலாம்
அங்கிதா பணியாற்றிய சொகுசு விடுதியை இடித்து தள்ளிய உத்தரகாண்ட் அதிகாரிகள், தற்போது சொகுசு விடுதியை இடிக்க உத்தரவிட்டது யார், எந்த அதிகாரி என்று விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவை நாமே கணித்து விடலாம். யாருமே சொகுசு விடுதியை இடிக்கவில்லை என்பதே முடிவாக இருக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.