விவசாயிகளுக்காக கடைசி உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன்... அன்னா ஹசாரே உருக்கம்!
டெல்லி; டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கடைசி உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதி உள்ளதாக அவர் கூறினார்.
விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக 5 முறை மத்திய அரசைத் தொடர்பு கொண்டபோதும் எந்தவிதமான பதிலும் இல்லை என அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் 8 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அது தோல்வியில்தான் முடிந்தது.

அதிரடி உத்தரவு
3 வேளாண் சட்டங்களை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட வல்லுநர் குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.

அன்னா ஹசாரே எச்சரிக்கை
இதற்கிடையே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடந்த மாதம் 14-ம் தேதி மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு எழுதிய கடிதத்தில், 'விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் ஜனவரி மாத இறுதியில் எனது கடைசி உண்ணாவிரதப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன்" என்று எச்சரித்திருந்தார்.

பிரதமருக்கு கடிதம்
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கும் அன்னா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- ஜனநாயகத்தின் மதிப்புகளின்படி மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் இல்லை. எந்த ஒரு சட்டத்தைக் கொண்டுவரும்போதும் மக்களின் கருத்துகளும், ஒப்புதல்களும் மிக அவசியம். இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் எனது கடைசி உண்ணாவிரதத்தை அவர்களுக்காக நடத்தப்போகிறேன்.

பாஜக புகழ்ந்தது
இது தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக இதுவரை நான் 5 முறை மத்திய அரசைத் தொடர்பு கொண்டேன். ஆனால், எந்தவிதமான பதிலும் இல்லை. ஆதலால், நான் கடைசி முயற்சியாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துவிட்டேன். ஊழலுக்கு எதிராக நான் ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்தியபோது, இதே பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்னைப் பாராட்டினார்கள், புகழ்ந்தார்கள். ஆனால், இப்போது கோரிக்கை தொடர்பாக எழுத்துபூர்வ உறுதியளித்தாலும் அதை நிறைவு செய்யமுடியவில்லை என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications