விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அண்ணா ஹசாரே... உண்ணாவிரத போராட்டத்தை நாளை தொடங்குகிறார்
டெல்லி: தலைநகரில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நாளை தொடங்கவுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் மூன்று புதிய விவசாய சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த விவசாய சட்டங்கள் காப்ரேட்களுக்கு ஆதரவாக இருப்பதாக் கூறி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் முகாமிட்டுள்ள விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி வருகின்றனர்
அண்ணா ஹசாரே
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக காலைவரையிற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளதாக சமூக செயற்பாட்டாளர் அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமது நகரில் நாளை இந்த போராட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 84 வயதான அண்ணா ஹசாரே, தனது ஆதரவாளர்களையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டம்
இது தொடர்பாக அண்ணா ஹசாரே வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாகவே விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளுக்காக நான் போராட்டம் நடத்தி வருகிறேன். இப்போது விவசாயிகளின் பிரச்சினையில் அரசாங்கம் சரியான முடிவை எடுக்கவில்லை என்பது போல் தெரிகிறது. விவசாயிகளிடம் அரசு சரியான முறையில் நடந்துகொள்ளவில்லை.
கடிதம் எழுதியுள்ளேன்
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் பல முறை வைத்துள்ளோம். பிரதமருக்கும் மத்திய வேளாண் துறை அமைச்சருக்கும் இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களில் ஐந்து முறை கடிதம் எழுதியுள்ளேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசு தொடர்ந்து ஆலோசித்து வருகிறது. ஆனால் இதுவரை எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடன்பாடு இல்லை
இந்த விவசாய சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அதில் இலவச மின்சாரம் உள்ளிட்ட சிலவற்றில் மட்டுமே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. விவசாய சட்டங்களை 1.5 ஆண்டுகள் நிறுத்தி வைக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது. இருப்பினும், விவசாய சட்டத்தைத் திரும்பப் பெறுவது மட்டுமே ஒரே தீர்வு என்று விவசாயிகள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது