இப்ப என்ன செய்வீங்க.. “இந்தியா” பெயரை “பாரத்” என மாற்றுவதா? பாஜக அரசுக்கு அர்விந்த் கெஜ்ரிவால் செக்
டெல்லி: ஜி20 நாடுகள் மாநாட்டுக்காக குடியரசுத் தலைவருக்கு மத்திய அரசு அனுப்பிய கடிதத்தை தொடர்ந்து இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற இருப்பதாக வெளியான தகவலை அடுத்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் கிடுக்குப்பிடி கேள்வியை எழுப்பி உள்ளார்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றும் பாஜக அரசின் முயற்சியை விமர்சித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் 400 புதிய மின்சார பேருந்துகளை அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிமுகம் செய்தார்.

அந்த நிகழ்வில் பேசிய கெஜ்ரிவால், "நமது நாட்டில் 140 கோடி மக்கள் வசிக்கின்றனர். கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், "செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இந்தியா என்ற பெயரை பாரத் என பெயர் மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், அதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆம் ஆத்மி கட்சி மேற்கொள்ளும். அனைவரும் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். மதங்களை பற்றி ஒருவர் தவறாக பேசுவது சரி கிடையாது." என்றார். கெஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு பாஜக ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியா என்ற பெயர் மாற்றம் என்பது இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநாட்டும் நடவடிக்கை என்று அவர்களில் பலர் கருத்திட்டு வருகின்றனர். இந்தியா என்ற பெயர் மாற்றம் குறித்த விவாதங்கள் இந்திய அரசியல் களத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
மத்தியில் பாஜக ஆட்சியமைத்ததில் இருந்தே இந்தியா என்ற பெயரை விட பாரத் என்ற பெயரையே அதிகம் பயன்படுத்தியது. கட்சியின் பெயரில் இருக்கும் பாரத் என்பதை, "ஆயுஷ்மான் பாரத்" உட்பட பல்வேறு அரசு திட்டங்களுக்கு சூட்டியது. பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பாஜகவை சேர்ந்த பலர் பாரத் என்றே பெரும்பாலும் இந்தியாவை அழைத்து வந்தார்கள்.
இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் பெங்களூருவில் நடைபெற்ற அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தது. அதே வேகத்தில் பாஜகவை சேர்ந்த பலர் நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஒரு படி மேலே போய் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியா என்பதை பாரத் என மாற்றினார். அது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், "நான் பாரத் குறித்து ஒரு ட்வீட் வெளியிட்டது, காங்கிரஸ் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, ட்ஜிட்டல் இந்தியாவை நினைவூட்டியது.
அரசியலமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயரான இந்தியா, காலனித்துவ மரபில் இருந்து கடன் வாங்கப்பட்டது. அதேபோன்ற பல மரபுகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாரதத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நாகரீக மோதல் என்பது பெயர்களை தாண்டி ஆழமானது. பாரதம் வெல்ல வேண்டும். பாரதம் வெல்லும்." என்று குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்தில், "இந்தியா என்ற பெயரை கிழக்கு இந்திய கம்பெனியும் பயன்படுத்தியது. இந்தியன் முஜாஹிதீன் அமைப்பும் இந்தியா என்ற பெயரை பயன்படுத்தியது. இந்தியா என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவது மற்றும் வேலைக்கு ஆகாது." என்று தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications