சி.ஏ.ஏ. விவகாரம்- முஸ்லிம்கள் குழந்தைகள் அல்ல.. ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு ஓவைசி பொளேர் பதில்
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்படுவதற்கு முஸ்லிம்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்துக்கு மஜ்லிஸ் கட்சி தலைவர் ஓவைசி பதிலடி கொடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய தசரா விழாவில் பேசிய அதன் தலைவர் மோகன் பகவத், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கும் எதிரானது இல்லை; முஸ்லிம்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதாக பொய் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது; போலி தகவல்களை உலவவிட்டு இஸ்லாமிய சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக கூறியிருந்தார்.

மோகன் பகவத்தின் இந்த கருத்துக்கு மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ட்விட்டரில் அளித்த பதில்:
தவறாக வழிநடத்தப்பட நாங்கள் ஒன்றும் குழந்தைகள் அல்ல. சி.ஏ.ஏ.- என்.ஆர்.சி.யானது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல எனில் அதில் மதம் தொடர்பான அம்சங்களை நீக்கலாமே? இத்தகைய சட்டங்களை நாங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து எதிர்த்து போராடுவோம்.

மதத்தை தொடர்பு கொண்டு குடியுரிமையை தீர்மானிக்கும் எந்த சட்டத்தையும் எதிர்ப்போம். இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ்- ஆர்ஜேடி உள்ளிட்டவைகள் மவுனம் காத்ததை நாங்கள் மறந்துவிடமாட்டோம்.
இவ்வாறு ஓவைசி பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications