லக்கிம்பூர் கேரி வன்முறை: மத்திய அமைச்சர் மகன் ஜாமீன் ரத்து.. சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு
லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய மனு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
லக்கிம்பூர் கேரி: லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மீஸ்ராவின் கார் விவசாயிகள் மீது மோதியது. இந்த விபத்தில் 4 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 4 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இச்சம்பவத்தில் உச்சநீதிமன்றத்தின் தொடர்ச்சியான தலையீட்டுக்கு பின்னர் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்தனர். ஆசிஸ் மிஸ்ராவுக்கு எதிராக சிறப்பு புலனாய்வுக்குழு 5 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் ஆசிஸ் மிஸ்ராவின் ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து கீழமை நீதிமன்றங்களில் நிராகரிக்கப்பட்டன. கடைசியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் ஆசிஸ் மிஸ்ராவுக்கு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதியன்று ஜாமீன் வழங்கியது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் சார்பிலும் இந்த ஜாமீனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான வாத, பிரதிவாதங்கள் கடந்த 4ஆம் தேதி முடிவடைந்து விட்டன. அன்றைய தினமே வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமினை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா , நீதிபதி சூரிய காந்தி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தனர்.
மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவின் ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் ஆசிஷ் மிஸ்ரா ஒரு வாரத்தில் சரணடையவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications