"பிரதமரை கொல்ல சதி செய்தவர்களுடன்.. தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு!" பீகார் போலீஸ் பரபர தகவல்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில காலமாகவே எல்லையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிக்குள் பயங்கரவாதிகள் பலரும் ஊடுருவ முயன்று வருகின்றனர்.
இந்தியாவில் பெரிய பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டே இதுபோன்ற பயங்கரவாத ஊடுருவல் முயற்சி நடந்து வருகிறது. இதைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர்.

பிரதமரைக் கொல்ல சதி
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் தலைநகர் பாட்னாவில் பயங்கரவாதிகள் செல் ஒன்றை அம்மாநில போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் பயங்கரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த ஜூலை 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பீகார் சென்ற போது, அவரை குறிவைத்துத் தாக்குதல் நடத்தவும் இவர்கள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

தாஹிர்
இந்நிலையில், இந்த பயங்கரவாதிகள் குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. பாட்னாவில் வசிக்கும் 26 வயதான மார்குவ் அஹ்மத் டேனிஷ் எனப்படும் தாஹிர், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுவான தெஹ்ரிக்-இ-லப்பைக் உடன் தொடர்பு வைத்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இவர் 'கஸ்வா-இ-ஹிந்த்' என்ற வாட்ஸ்அப் குழு மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பி உள்ளார்.

வெளிநாட்டு நபர்கள்
அந்தக் குழுவில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்படப் பல வெளிநாட்டினர் இருந்தனர். அவரது மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், அதில் இருக்கும் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பைசான் என்பவருடன் அந்த நபர் தொடர்பில் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் தேசியக் கொடி மற்றும் சின்னங்களை அவமரியாதை செய்யும் வகையில் மெசேஞ்களை அனுப்பியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி
மறுபுறம், ஜார்க்கண்டின் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி முகமது ஜலாவுதீனையும் கைது செய்து உள்ளனர். அவர் இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கத்தின் (SIMI) முன்னாள் உறுப்பினர் ஆவர். மேலும், PFI மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்களிலும் அவர் உறுப்பினராக உள்ளார் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய ஆலோசனை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இவர்களுக்குப் புல்வாரி ஷெரீப் பகுதியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது குறித்து ரகசிய ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி உள்ளனர். இவர்களைச் சந்திக்கக் கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்து சென்றதாகவும் தகவல் வெளியானது.
Recommended Video

தமிழ்நாடு
இது தொடர்பாக பாட்னா சிறப்பு எஸ்பி மானம் ஜீத் சிங் கூறுகையில், "கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவர்களுக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதை விசாரணையில் கண்டுபிடித்து உள்ளோம். இது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநில காவல் துறைக்குத் தகவல் பகிரப்படும். அவர்கள் விசாரணையைத் தொடர்வார்கள்"என்றார்.












Click it and Unblock the Notifications