நாடாளுமன்றம்: முதல் நாளிலேயே விவசாய சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல்-மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும்; அதனால் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த ஆண்டு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. விவசாய விளைபொருட்கள் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கும் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இதுவரை 700க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விவசாயிகள், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர்.
பயிர்க்கடன் உடனே வழங்குக! கரும்பு ஆதார விலையை உயர்த்துக! தஞ்சை விவசாயிகள் போராட்டம்!
இந்நிலையில் திடீரென பிரதமர் மோடி 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். அத்துடன் மத்திய அமைச்சரவையும் 3 சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே அதாவது நாளை மறுநாள் 3 விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும். ஆகையால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்டு வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
மேலும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும். விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து இந்த குழு விவாதித்து முடிவெடுக்கும். மத்திய அரசின் இந்த முடிவை போராடும் விவசாய சங்கங்கள் ஏற்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கேட்டுக் கொண்டார். இருந்தபோதும் தங்களுக்கு மத்திய அரசின் குழு பற்றி எதுவும் தெரியாது; தங்களது போராட்டம் நீடிக்கும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.