"நியூ ஸ்பேஸ் இந்தியா".. 10 செயற்கோள்களை வச்சுக்கோங்க.. விண்வெளியில் உச்சம் தொட போகும் இந்தியா!
டெல்லி: புவி வட்ட பாதையில் வலம் வரும் 10 தொலைதொடர்பு செயற்கொலைகோள்களை பொதுத்துறை நிறுவனமான நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்திற்கு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவே நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனமாகும். 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பொதுத்துறை நிறுவனம், இஸ்ரோவின் பணிகளை வணிக ரீதியாக பயன்படுத்துவதற்கும், சிறிய வகையிலான செயற்கைக்கோள் வாகனங்கள் மூலம் செயற்கைகோள்களை ஏவுவதற்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. என்ஐஎஸ்எல் இதுவரை 46 சர்வதேச செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. நடப்பு ஆண்டில் சர்வதேச செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக 4 பிரத்யேக ஏவுகணை சேவை ஏற்பாடுகளில் கையெழுத்திட்டுள்ளது. இது தவிர, ஜிசாட்-11, ஜிசாட்-19 மற்றும் ஜிசாட்-29 உள்ளிட்ட செயற்கைக்கோள்களில் உயர் செயல்திறன் செயற்கைக்கோள் திறனை வணிகமயமாக்கும் பணியிலும் என்எஸ்ஐஎல் ஈடுபட்டு வருகிறது.

மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தநிலையில் புவி வட்டப்பாதையில் வலம்வரும் 10 செயற்கைகோள்கள் வழங்கப்படுவதன் மூலம் நிதி விவகாரங்கள் மற்றும் மூலதன திட்டங்களை செயல்படுத்துவதிலும் என்எஸ்ஐஎல் சுதந்திரமாக செயல்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மற்ற துறைகளில் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு வழங்கும் திறனும், தொழில்நுட்ப உபகரணங்களும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பங்கு மூலதனத்தை அதிகரிக்க ஒப்புதல்
அதேபோல் என்எஸ்ஐஎல் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை ரூ.1 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.7,500 கோடியாக உயர்த்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் விண்வெளித்துறையில் உள்நாட்டு பொருளாதாரா செயல்பாடுகளை ஊக்குவித்து, சர்வதேச விண்வெளி சந்தையில் இந்தியாவின் பங்கை அதிகரிக்கவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யுஏஇ ஒப்பந்தப் பரிந்துரை
இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே தொழில் துறை மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல் காற்றின் தரம் மற்றும் பருவநிலை மாற்றம் தொடா்பாக இந்தியாவின் ஆா்யபட்டா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், ஜப்பானின் தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஒப்புதலுக்கு வரவேற்பு
மத்திய அமைச்சரவையின் இந்த ஒப்புதலுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் இதுகுறித்து வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் ஆலோசகரும், ஸ்பேஸ் ஃபெட் இந்தியா அமைப்பின் ஆலோசகருமான சைதன்ய கிரி கூறுகையில், இது ஒரு அற்புதமான முடிவு. இதன்மூலம் விண்வெளி சீர்திருத்தங்களுக்கான அரசின் உறுதிப்பாட்டை இந்த முடிவு மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications