ரெடியாகும் "மெகா பிளான்.." திடீரென அமித் ஷா அனுப்பிய மெசேஞ்! இன்று தொடங்கும் பாஜக தேசிய செயற்குழு
டெல்லி: அடுத்து வரும் மாதங்களில் பல மாநிலங்களில் வரிசையாகச் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று பாஜக தேசிய செயற்குழு நடைபெற உள்ளது. இதற்கிடையே இது குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடைசியாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்த போதிலும், குஜராத் மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்கு பூபேந்திர படேல் தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்துள்ளது.
இந்த உற்சாகத்தில் அடுத்து கர்நாடக தேர்தலையும் எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்கு முன்பு, பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அவை முக்கியமானதாக மாறியுள்ளது.
பாஜக தலைவர்களை பொதுவெளியில் விமர்சித்தால் நியாயம் கிடைக்குமா? காயத்ரிக்கு வானதி கேள்வி
தேசிய செயற்குழு
மக்களவை தேர்தலுக்குப் பல மாதங்கள் இருக்கும் போதிலும், இப்போதே பாஜக தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டது. பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் கர்நாடக சட்டசபைத் தேர்தல் உட்பட வரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேசிய செயற்குழு கூட்டத்திற்கு முன்பு பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் முக்கியமானது என்று கூறியிருந்தார்.
அமித் ஷா
மேலும், அடுத்து நடக்கும் 2024 தேர்தலில் வென்று நரேந்திர மோடி பிரதமராகத் தொடர்வார் என்றும் கூறியிருந்தார். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை மறைமுகமாகச் சாடிய அமித் ஷா மேலும் கூறுகையில், "குஜராத் மக்கள் பாஜக அதிகப்படியான இடங்களில் வென்று ஆட்சி அமைக்க உதவியுள்ளனர். இதன் மூலம் குஜராத் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் அவதூறு பரப்புவோருக்குப் பதிலடி கொடுத்துள்ளனர். சமூகத்தில் சாதி வெறி பேன்ற விஷயத்தைப் பரப்ப முயல்பவர்களுக்கு நல்ல பாடத்தைக் குஜராத் மக்கள் கற்பித்துள்ளனர்.
குஜராத் தேர்தல்
வெற்று, பொய்யான மற்றும் கவர்ச்சியான வாக்குறுதிகளை அளிப்பவர்களுக்குப் படுதோல்வியைப் பரிசாகக் கொடுத்துள்ளனர். குஜராத்தையும் நரேந்திர மோடியையும் அவதூறு செய்ய முயன்றவர்களுக்குக் குஜராத் மக்கள் பதிலடி கொடுத்துள்ளனர். இந்த தேர்தல் முடிவு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முக்கியமான ஒரு மெசேஞ்சை கொடுத்துள்ளது. அதாவது அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தலிலும் நிச்சயம் பாஜக தான் வெல்லும். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகப் பதவியேற்பது உறுதி" என்று அவர் தெரிவித்தார்.
வரிசையாக நடக்கும் தேர்தல்
அடுத்து வரும் மாதங்களில் பாஜக ஆட்சியில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் வரிசையாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் டெல்லியில் நடைபெறும் தேசிய செயற்குழு கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தேர்தலைச் சந்திக்கும் மாநிலங்களில் என்ன மாதிரியான உத்திகளைக் கையாள வேண்டும் என்பது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான வழிகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி
முன்னதாக இன்று பிரதமர் மோடி தேசிய தலைநகர் டெல்லியில் ஒரு சாலை பேரணியை நடத்துகிறார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசும் போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்குத் தயாராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய தீர்மானங்கள்
பொருளாதாரம், அரசியல், ஏழைகள் நலன் மற்றும் இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி தொடர்பாக நான்கு முக்கிய தீர்மானங்களை பாஜக இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் தவிர, பாஜக தலைவர் ஜேபி நட்டா, அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அனைத்து தேசிய நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேபி நட்டா
பாஜக தேசிய தலைவராக உள்ள ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜேபிட நட்டாவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சரானதால், 2020இல் ஜேபி நட்டா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.