அமித் ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் மீட்டிங்.. எடப்பாடியுடன் முரளிதர ராவ் சந்திப்பு.. என்ன நடக்கிறது?
டெல்லி: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன், தமிழக சீனியர் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சந்திப்பு நிகழ்த்திய அதே நேரத்தில், சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி இல்லத்தில் சுமார் 1 மணி நேரம் இன்று இரவு இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் நிருபர்களிடம் முரளிதர் ராவ், கூறுகையில், குடியுரிமை சட்டத் சட்டத்திற்காக பாஜக எடுத்துவரும் முயற்சிகளை பற்றி பேசினேன். தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் முதல்வருடன் விவாதித்தேன்.
தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்ததற்கு, மத்திய அரசுக்கு, முதல்வர் நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் இத்தனை மருத்துவக் கல்லூரிகளை யாரும் ஏற்படுத்தியதில்லை என்று பாராட்டு தெரிவித்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டெல்லியில், அமித் ஷாவுடன், இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் அதுசார்ந்த போராட்டங்கள் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சென்னையிலும் முதல்வருடன் பாஜகவின், முக்கியமான தலைவர்களில் ஒருவரான முரளிதர் ராவ் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவரும் குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக ஆலோசித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு சோஷியல் மீடியா அக்கவுண்டும் கிடையாது.. மோடி அதிரடி ட்வீட்.. திடீர் பரபரப்பு
இது போன்ற நிகழ்வுகள், முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. தமிழக சட்டசபையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகின்றன.
பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக சட்டசபையில் அதுபோன்ற தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து இந்த ஆலோசனையின்போது விவாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.