கோவா, மணிப்பூர்.. முதல்வர் பதவிக்கு மல்லுக்கட்டும் பாஜக எம்எல்ஏக்கள்! அமித்ஷா வீட்டில் அவசர மீட்டிங்
டெல்லி: கோவா, மணிப்பூர் மாநில முதலமைச்சர்கள் தேர்வு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வீட்டில் நேற்றிரவு அவசர கூட்டம் நடைபெற்று இருக்கிறது.
நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்றது.
இதில் எந்த மாநிலத்திலும் பாஜக இன்னும் பதவியேற்பு விழாக்களை நடத்தவில்லை. குறிப்பாக கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் யார் முதலமைச்சர் என்பதையே பாஜக முடிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
தரமற்ற காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்படுகிறதா? உடனே இந்த எண்ணுக்கு தகவல் சொல்லுங்க!
வீட்டில் அவசர கூட்டம் கூட்டிய அமித்ஷா
இருமாநிலங்களிலும் பாஜக மூத்த தலைவர்கள் முதலமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதால் குழப்பத்தில் இருக்கிறது தாமரை கட்சியின் தலைமை. இந்த நிலையில்தான் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா வீட்டில் இருமாநில பாஜக மூத்த எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
கோவா, மணிப்பூரில் அடுத்த முதலமைச்சர் யார்?
சனிக்கிழமை இரவு சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் கோவா, மணிப்பூர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்தும், மாநிலங்களில் பாஜக ஆட்சியமைப்பது பற்றியும் தலைவர்களுடன் அமித்ஷா விவாதித்து இருக்கிறார். இதன் மூலம் தற்போதைய இடைவெளிக்கு பிறகு நிலையான ஆட்சியை நிறுவ நல்ல தலைமையையும் அமைச்சரவையையும் உருவாக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இரு மாநில பாஜகவில் உட்கட்சிப்பூசல்
இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் கோவாவிலும் மணிப்பூரிலும் தற்போதைய முதலமைச்சர்கள் தலைமையிலேயே பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறது. ஆனால், அவர்கள்தான் அடுத்த முதலமைச்சர் என பாஜக தலைமை அறிவிக்கவில்லை. அதே நேரம் இரு மாநில முதலமைச்சர்களும் தங்களுக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்துள்ளனர். அதேபோல் இம்முறை தங்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என வேறு சில பாஜக எம்.எல்.ஏ.களும் தலைமையின் அழைப்பை நம்பிக்கையோடு எதிர்நோக்கியுள்ளனர்.
கோவா, மணிப்பூர் முதலமைச்சர்கள் பங்கேற்பு
இந்த சூழலில்தான் உட்கட்சிப்பூசலை தணிக்க அமித்ஷா கூட்டத்தை கூட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷா தலைமையிலான இந்த கூட்டத்தில் கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் முதலமைச்சர் பதவிக்காக காத்திருக்கும் பாஜக எம்.எல்.ஏ. விஸ்வஜித் ரானே உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். அதேபோல் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அம்மாநிலத்தில் முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடும் பாஜக எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங், மணிப்பூர் சட்டப்பேரவை சபாநாயகர் யும்னம் கேம்சந்தும் அமித்ஷா இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்க
விரைவில் முதலமைச்சர் பெயர்கள் அறிவிப்பு
மேலும் இந்த கூட்டத்தில் இரு மாநிலங்களில் முதலமைச்சர் மற்றும் புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகவும், விரைவில் முதலமைச்சர்கள் யார் என்று கட்சித் தலைமை அறிவிக்கும் எனவும், அது பலருக்கு ஆச்சரியத்தை தரும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.