பாஜக நுபுர் சர்மாவின் நபிகள் குறித்த அவதூறு: சதித் திட்டங்களுடன் தொடர்ந்து சிக்கும் பயங்கரவாதிகள்!
டெல்லி: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை பாஜகவின் நுபுர் சர்மா அவதூறாக பேசிய விவகாரம் இப்போது தீவிரவாதிகள் மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நுபுர் சர்மாவை படுகொலை செய்ய உத்தரப்பிரதேசத்தில் கடந்த வாரம் ஒரு தீவிரவாதி சிக்கிய நிலையில், அவரது கருத்துகளுக்காக இந்தியாவின் அதி முக்கியமான தலைவர் ஒருவரை கொலை செய்யும் சதித் திட்டத்துடன் ரஷ்யாவில் ஒரு ஐ.எஸ். பயங்கரவாதி பிடிபட்டிருக்கிறார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்தவர் நுபுர் சர்மா. டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில், இஸ்லாமியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்தார். இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் மிகப் பெரும் வன்முறையே வெடித்தது.
17 வயது சிறுமி கொலை.. குற்றவாளி யார்? சாமியாரிடம் “ஐடியா” கேட்ட போலீஸ் சர்மா! மபியில் பரபரப்பு
நுபுர் சர்மா விவகாரம்
அத்துடன் நுபுர் சர்மாவின் கருத்துக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வளைகுடா நாடுகள் தங்களது கடும் அதிருப்தியை வெளியிட்டன. மேலும் இந்திய மத்திய அரசுதான் நுபுர் சர்மாவுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இந்த நாடுகள் வலியுறுத்தின. இது நாட்டுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் நுபுர் சர்மா, பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
வன்முறைகள்- போராட்டங்கள்
ஆனால் நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல பகுதிகளில் பிரம்மாண்ட போராட்டன்க்கள் நடைபெற்றன. நுபுர் சர்மா மீது பல மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்த ராஜஸ்தான் டெய்லர் ஒருவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொல்லப்பட பெரும் சர்ச்சையும் வெடித்தது. உச்சநீதிமன்றமும் நுபுர் சர்மாவை கடுமையாக கண்டித்தது. இப்போது நுபுர் சர்மா மீதான அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீஸ் விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி. கைது
இந்தப் பின்னணியில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் முகமது நதீம் என்ற பயங்கரவாதி கடந்த வாரம் பிடிபட்டார். ஜெய்ஸ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த அந்த பயங்கரவாதியிடம் உ.பி. அதிரடிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான், நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய நுபுர் சர்மாவை படுகொலை செய்ய தாம் திட்டம் தீட்டியதாக முகமது நதீம் வாக்குமூலம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ரஷ்யாவில் கைது
தற்போது ரஷ்யாவில் ஐ.எஸ். பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்தது அம்பலமானது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த தீவிரவாதியிடம் விசாரணை நடத்தி பெறப்பட்ட வீடியோ வாக்குமூலம் இப்போது வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் சிக்கிய ஐ.எஸ்.தீவிரவாதி வாக்குமூலத்தில், நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதற்காக இந்தியாவில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த எனக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து இந்தியா செல்ல திட்டமிட்டிருந்தேன் என தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு ஆசிய நாடு ஒன்றை சேர்ந்த இந்த பயங்கரவாதி துருக்கியில் ஐஎஸ் இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தற்கொலைப் படை தீவிரவாதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. நுபுர் சர்மாவின் கருத்துக்காக அவரையும் இந்திய தலைவர்களையும் தீவிரவாதிகள் இலக்கு வைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.