நாட்டுக்கு இப்போ இதுதான் தேவை.. சிறு தொழில்களுக்கு சலுகை மழை பொழிந்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: வேலை வாய்ப்புகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் குறித்து, பொருளாதார ஆய்வறிக்கை பேசிய நிலையில், அதற்கான அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.
பட்ஜெட் உரையில், அவர் சிறு தொழில்கள் முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை முன்மொழிந்தார். இந்த திட்டங்கள், தொழில்முனைவோருக்கு மிகுந்த அவசியமானவையும் கூட.
1) தொழில் துறை தகவல்களை பரிமாற ஸ்டார்ட்அப்களுக்காகவே, பிரத்யேகமாக தூர்தர்ஷன் நிர்வாகத்தின் கீழ் தொலைக்காட்சி சேனலைத் தொடங்க அறிவிப்பு.
2) வட்டி குறைப்பு திட்டத்தின் கீழ், ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறுதொழில் நிறுவனங்களுக்கும் 2% விகித வட்டியுடன் கடன் வழங்க ரூ .350 கோடி ஒதுக்கீடு.
3) சிறு தொழில் நிறுவனங்களுக்காக கட்டண வெப்சைட் திறக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
4) ரூ .1.5 கோடிக்கும் குறைவான ஆண்டு வருவாய் கொண்ட சிறு சில்லறை வணிகர்களுக்கு பிரதான் மந்திரி மன் தன் யோஜ்னாவின் கீழ், ஓய்வூதிய பலன் கிடைக்கும். 3 கோடிக்கும் அதிகமான கடை உரிமையாளர்கள் இத்திட்டத்தால் பயனடைவார்கள்.
5) ஆன்லைன் போர்ட்டல் மூலம் சிறுதொழில் நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களுக்குள் ரூ .1 கோடி கடன் வழங்கப்படும்.
6) தேவையான தகவல்களை தாக்கல் செய்யும் ஸ்டார்ட்அப் மற்றும் முதலீட்டாளர்கள், எந்தவிதமான ஆய்வுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள். இ-சரிபார்ப்புக்காக ஒரு திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் திரட்டப்படும் நிதிக்கு வரி பிணை தேவையில்லை.
7) வரி செலுத்துவோர் இன்னல்களை குறைக்க, இந்த ஆண்டு முதல் மனித இடையூறே இல்லாமல் மின்னணு முறையில் வருமான வரி மதிப்பீடு செலுத்தும் நடைமுறை கொண்டுவரப்படுகிறது.
8) நிலுவையில் உள்ள ஆய்வுகள் மற்றும் வழக்குகள் தொடர்பான விஷயங்களுக்காக, சிபிடிடி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
9) நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். அனைத்து மாவட்டங்களுக்கும் சுய உதவிக்குழுக்களை விரிவுபடுத்துவோம். மேலும் ஒவ்வொரு சுய உதவிக் குழுவில் ஒரு பெண்ணுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ .1 லட்சம் வரை கடன் கிடைக்கும்.