இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கியது!
டெல்லி: இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ மற்றும் சுகாதார முன்களப் பணியாளர்கள் , இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கான பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று தொடங்குகியது. டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டது.
நாட்டில் ஓமிக்ரான் 3500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளது. உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் ஓமிக்ரான் பரவியது. இது கொரோனா தடுப்பூசிகளுக்கு மட்டுப்படாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து பூஸ்டர் டோஸுக்கு இந்த ஓமிக்ரான் கட்டுப்பபடும் என்றும் சொல்லப்பட்டது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும். 10 ஆம் தேதி முதல் இணை நோய்கள் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்றார்.
முன்பதிவு வேண்டாம்.. நாளை மறுநாள் முதல்.. பூஸ்டர் தடுப்பூசி யாரெல்லாம் போட்டுக்கொள்ளலாம் தெரியுமா?
இந்த நிலையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று நாடு முழுவதும் தொடங்கின. இதற்காக கோவின் இணையதளத்தில் பதிவு செய்வது நேற்று முன் தினமே தொடங்கிவிட்டது. இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டும் 13.75 கோடி பேர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்தும் பணிகள் தொடங்கின.
பூஸ்டர் டோஸ் செலுத்த வருவோர் 2 ஆவது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும். கோவின் தளத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள் பூஸ்டர் டோஸுக்கு பதிவு செய்யலாம்.
ஏற்கெனவே 2 தடுப்பூசி செலுத்தியவர்கள் ஒரு முறை தங்கள் பதிவை முன்னெச்சரிக்கை டோஸ் பிரிவில் பதிவு செய்தால் போதுமானது. ஏற்கெனவே 2 தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவரிடம் எந்த சான்றையும் பெற தேவையில்லை. முதல் இரு தவணைகள் எந்த தடுப்பூசியை போட்டார்களோ அதே தடுப்பூசியைதான் பூஸ்டர் டோஸிலும் போட வேண்டும். அதாவது ஏற்கெனவே இரு டோஸ்கள் கோவிஷீல்டு என்றால் இந்த மூன்றாவது டோஸும் கோவிஷீல்டுதான். கோவாக்சின் என்றால் மூன்றாவது டோஸும் கோவாக்சின்தான்.
ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் 3ஆவது டோஸ் செலுத்தினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதை 88 சதவீதம் தடுக்கிறது என பிரிட்டனில் ஆய்வுகள் கூறுகின்றன.