கவர்மெண்ட் காசை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் தர்றீங்க.. டுவிட்டரில் வறுத்தெடுத்த ப. சிதம்பரம்
டெல்லி:அரசுப் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடக்கி வைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. அதன்படி, பிப்ரவரி 24ம் தேதி தொடங்கப்படுகிறது. இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப் பட்டு உள்ளது.
|
ஒரு கோடி பேருக்கு பலன்
அதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை இந்த திட்டம் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது.
|
முதல் தவணை 2 ஆயிரம்
தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தை மோடி தொடங்கி வைக்கிறார். இந் நிலையில் நிதி உதவி திட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
|
டுவிட்டர் விமர்சனம்
தமது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
|
கறுப்பு நாள்
இன்று இந்திய ஜனநாயகத்திற்கு கறுப்பு நாள். 5 பேர் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்திற்கு நாள் ஒன்றுக்கு ரூ 17.
வாக்குக்கு லஞ்சம்
இது உதவித்தொகையா, பிச்சையா, லஞ்சமா? இது ஓட்டுக்கு லஞ்சம் என்பதை தவிர வேறு என்ன? மோடி அரசு விவசாயத்தை ஐந்து ஆண்டுகள் சீரழித்து விட்டு ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் ரூ 2000 தரப்போகிறார்கள்.
தேர்தல் ஆணையம் மீது புகார்
அரசின் பணத்தை எடுத்து ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார். தேர்தல் ஆணையம் இதை பார்த்து கொண்டு என்ன செய்கிறது என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவாகவும். எதிர்ப்பாகவும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.