பட்ஜெட் 2021 : எதிர்கட்சியினர் அமளிக்கிடையே பட்ஜெட் உரையை வாசித்த நிர்மலா சீதாராமன்
டெல்லி: நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினரின் அமளிக்கிடையே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்குத் தாக்கல் செய்தார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதால், வருமானவரி விலக்கு வரம்பை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறுமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
சிறு, குறு தொழில்கள் மற்றும் வேளாண்துறைக்கு சலுகைகள் அளிக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக ரயில் சேவையை தொடங்குவது போன்ற அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏழை, நடுத்தர மக்கள் கொரோனா நெருக்கடியில் இருந்து படிப்படியாக வெளியேறி வரும் நிலையில், கூடுதல் வரிச் சலுகைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். மேலும், நடுத்தர வருமானம் பெறும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்து வரும் நிலையில், இதற்காக ஏற்பட்ட செலவுகளுக்காக வரி சலுகைகள் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் இன்றைய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த சில மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளை சமாதானப்படுத்த அரசு கடுமையாக முயற்சித்து வரும் நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. யத பட்ஜெட் கூட்டத் தொடரில் 5 நிதி மசோதாக்கள் உட்பட 38 மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன. அணை பாதுகாப்பு, மின்சார மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு என மத்திய பட்ஜெட்டில் பிரத்யேக அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் ஆவண நடைமுறை இன்று அமலுக்கு வந்து உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் பட்ஜெட் அறிக்கையை லேப்டாப், மொபைல் உள்ளிட்டவற்றில் பதிவிறக்கி பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.