உ.பி-இல் உச்சக்கட்ட பரபரப்பு.. ஓவைசி வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு.. காரில் பாய்ந்த 3 குண்டுகள்
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஓவைசி சென்ற கார் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் 10ஆம் தேதி தொடங்கி சட்டசபைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10இல் அறிவிக்கப்பட உள்ளது.
இதில் நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10இல் தொடங்கி 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

5 மாநில தேர்தல்
இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகவே ஆட்சியில் உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த தேர்தலைப் போலவே இந்த முறையும் 4 மாநிலங்களிலும் வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம். இதற்காகத் தேர்தல் பணிகளை அக்கட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பிரதமர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலம் என்பதால் உத்தரப் பிரதேசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

மஜ்லிஸ் கட்சி
அங்கு இப்போது ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி உள்ளது. இது தவிரப் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளும் களத்தில் உள்ளன. இது தவிர உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்களின் மக்கள்தொகையும் கணிசமாக உள்ளது. இதனால், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மொத்தம் 403 இடங்களைக் கொண்ட உபி சட்டசபைத் தேர்தலில் 100 இடங்களில் மஜ்லிஸ் கட்சி போட்டியிடுகிறது.

ஓவைசி
இதற்காக அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி வியாழக்கிழமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அதன்படி மீரட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பின்னர் ஓவைசி தனது காரில் டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சாஜர்சி சுங்கச்சாவடி அருகே கார் சென்றுகொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை மர்ம நபர்கள் சிலர் சுட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்த மர்ம நபர்கள் துப்பாக்கியை அங்கேயே போட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

3 குண்டுகள்
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓவைசி சில படங்களைத் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் காரில் இரண்டு குண்டுகளின் பாய்ந்துள்ளது தெரிகிறது. மேலும், 3ஆவது குண்டு கார் டயரில் பாய்ந்ததில், டயர் பஞ்சரானதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேறு காரில் ஏறி, டெல்லி சென்றதாகவும் ஓவைசி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேர்தலுக்கு சில நாட்கள் உள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒருவரை உபி போலீஸ் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications