இங்க இவங்க எப்படியோ.. அங்க அவுக பெரியாளு.. மொத்தமாக தூக்கும் பாஜக, திரிணாமுல்.. மபி vs மே.வங்கம்
டெல்லி: மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் அந்த மாநிலத்தை திரிணாமுல் காங்கிரஸ்தான் முன்னிலை வகிக்கிறது. இதேபோல் மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 3 சட்டசபை தொகுதிகளிலும், ஒரு மக்களவை தொகுதியிலும் அந்த மாநிலத்தை ஆளும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது.
நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய 13 மாநிலங்களில் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, ஹிமாச்சல பிரதேசத்தின் மந்தி, மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தல்
அசாமில் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம் 3, ஹிமாச்சல் பிரதேசம் 3, மேகாலயா 3, பிகார் 2, கர்நாடகா 2, ராஜஸ்தான் 2, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. இன்று முடிவுகள் வெளியாகி வருகின்றன.

கடும் போட்டி
மேற்கு வங்கத்தில் தின்ஹாடா, கர்தாஹா, கோசாபா (SC), மற்றும் சாந்திபூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கும் (BJP) ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் (TMC) இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. இதில் நான்கு இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது.

நான்கு தொகுதி
பாஜகவின் நிசித் பிரமானிக் மற்றும் ஜெகநாத் சர்க்கார் ஆகியோர் எம்பிக்களாவதால் மேற்குவங்கத்தின் திங்ஹாடா மற்றும் சாந்திபூரில் இடைத்தேர்தல் உருவானது. இதற்கிடையில், வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் இறந்ததையடுத்து, கோசாபா மற்றும் கர்தாஹாவின் இடங்கள் காலியாகின. கர்தாஹா தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற காஜல் சின்ஹா, மேற்கு வங்கத்தில் மே 2 அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே கொரோனா காரணமாக இறந்தார். இதேபோல் கோசாபா தொகுதியில் 2011 ஆம் ஆண்டு முதல் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற டிஎம்சி மூத்த தலைவர் ஜெயந்த நாஸ்கர் காலமானார். இதன் காரணமாக தேர்தல் நடந்தது.

சோவந்தேப் சட்டோபாத்ய
கொல்கத்தாவில் உள்ள பபானிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற சோவந்தேப் சட்டோபாத்யாயை திரிணாமுல் காங்கிரஸ் கர்தாஹாவில் நிறுத்தியது. மம்தா பானர்ஜி 2021 சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராமில் பிஜேபியின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்ததை அடுத்து, செப்டம்பர் 30 ஆம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சோவந்தேப் சட்டோபாத்ய பாபானிபூர் தொகுதியில் பதவியை ராஜினாமா செய்தார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் ஜாய் சாஹா போட்டியிட்டார்.

பாஜக போட்டி
தின்ஹாட்டாவில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் உதயன் குஹாவும், பாஜகவின் அசோக் மொண்டலும் போட்டியிட்டனர். சாந்திபூரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரஜாகிஷோர் கோஸ்வாமிக்கு எதிராக நிரஞ்சன் பிஸ்வாஸை பாஜக நிறுத்தியது. இதற்கிடையில், மேற்கு வஙகத்தில் நடந்த நான்கு இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது.

பாஜக முன்னிலை
மத்தியப் பிரதேசத்தில் உள்ள கந்த்வா மக்களவைத் தொகுதி மற்றும் பிரித்விபூர், ராய்கான் (எஸ்சி) மற்றும் ஜோபாட் (எஸ்டி) ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் கட்சியான பாஜக வேட்பாளராக முன்னிலை வகிக்கிறார்கள். எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை.

பாஜக கூட்டணி
அஸ்ஸாம் மாநிலத்தில் ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாஜக கூட்டணியே ஐந்து இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக 3 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான யுபிபிஎல் 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பொதுவாகவே இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி பெறும் என்பது கருத்தாக உள்ளது அபூர்வமாகவே எதிர்க்கட்சிகள் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆளும் கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.












Click it and Unblock the Notifications