இடைத் தேர்தல் புள்ளி விவரத்தை பாருங்க.. 2022ம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு தோல்விதான்: ப.சிதம்பரம்
டெல்லி: 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில், பாஜக தோல்வியடைய வாய்ப்பு தெரிகிறது, என்று 13 மாநிலங்களில் நடந்து முடிந்த இடைத் தேர்தல்கள் முடிவுகளின் ரிசல்ட் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.
இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில் காங்கிரஸ் கட்சியினர் ரொம்பவே உற்சாகமாக உள்ளனர். இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருக்கும் நிலையில், அவரும், தீவிர அரசியலில் ஈடுபடாத நிலையில், காங்கிரசுக்கு கிடைத்த இந்த வெற்றி, பாஜகவுக்கு எதிரான அதிருப்தி அலையின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஒரு ட்வீட் பதிவு வெளியிட்டுள்ளார்.
சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் ரூ.14 கோடி மோசடி புகார் - உயிருக்கு ஆபத்து இருப்பதாக குற்றச்சாட்டு
ப.சிதம்பரம் கருத்து
ப.சிதம்பரம் ட்வீட் இதோ: 30 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் பற்றிய சிந்தனையைத் தூண்டும் ஒரு அலசல். பாஜக 7 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக அல்லாத கட்சிகள் 7 இடங்களை வென்றன, அதில் 1 இடத்தை மட்டுமே பாஜகவின் மறைமுக கூட்டாளியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வென்றது. மற்ற 6 இடங்களில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் வெற்றி பெற்றன. மக்களிடம் மரியாதை இன்று சமமான நிலையில் உள்ளன. 2022ல் காற்று எந்த திசையில் வீசும்? இவ்வாறு ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
பாஜக வேட்பாளர் டெபாசிட் போச்சு
ஹிமாச்சல பிரதேசம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சொந்த மாநிலமாகும். அங்கு மூன்று சட்டசபை தொகுதி இடைத் தேர்தல்களிலும், ஒரு, லோக்சபா தொகுதி இடைத் தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. அதில், ஒரு சட்டசபை இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.
கர்நாடக நிலவரம்
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கே முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் வென்றுள்ளது.
வாக்கு சதவீதம்
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் 49%, பாஜக 28%, ராஜஸ்தானில் காங்கிரஸ் 37%, பாஜக 18%, மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 57%, பாஜக 36% சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் அதன் உள் பிரச்சினைகளை சரி செய்தால் 2022 சட்டசபை தேர்தலுக்கு முன் பெரும் வெற்றி வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.