இந்து முஸ்லீம் பிளவுக்கும்..சிஏஏ, என்ஆர்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அடித்து சொல்லும் மோகன் பகவத்
டெல்லி: இந்து முஸ்லீம் பிளவுக்கும் சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனக் கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சிலர் தங்களின் அரசியல் ஆதாயத்திற்கு இதுபோன்ற வகுப்புவாத கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலத்திற்குச் சென்றுள்ளனர். இன்று அவர் தலைமையில் சிஏஏ, என்ஆர்சி குறித்த புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது.
Citizenship debate over NRC and CAA-Assam and the Politics of History என்ற புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய அவர், இந்து முஸ்லீம் பிளவுக்கும் சிஏஏ மற்றும் என்ஆர்சி-க்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

சிஏஏ, என்ஆர்சி காரணமில்லை
இது குறித்து மோகன் பகவத் பேசுகையில், "மத்திய அரசின் சிஏஏ, என்ஆர்சி சட்டம் எந்தவொரு இந்தியக் குடிமகனுக்கும் எதிரானது இல்லை. சிஏஏ சட்டத்தால் எந்தவொரு இஸ்லாமியக் குடிமகனும் பாதிக்கப்பட மாட்டார். சிலர் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இதை இந்து-முஸ்லீம் பிரச்சினையாக மாற்றியுள்ளனர். இந்து - முஸ்லீம்களுக்கு இடையே இருக்கும் பிர்சிசனைக்கும் சிஏஏ - என்ஆர்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

நாடு பிளவுபட்டிருக்காது
இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர், இரு நாடுகளும் தங்கள் நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் என உறுதி ஏற்றனர். இந்தியா இன்று வரை பின்பற்றுகிறது. ஆனால், பாகிஸ்தான் அப்படிப் பின்பற்றுவதில்லை. ஒரு சுதந்திர நாடு வேண்டும் என்ற கனவுடன் அனைவரும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினர். பிரிவினை சமயத்தில் இந்திய மக்களின் ஒப்புதலை அவர்கள் கேட்கவில்லை. அந்த நேரத்தில் மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டிருந்தால் நாடு பிளவுபட்டிருக்காது. அப்போது இருந்த தலைவர்கள் தான் இந்த முடிவை எடுத்தனர், அதைப் பொதுமக்கள் அதை ஏற்றுக்கொண்டனர்.

நமது கடமை
பிரிவினைக்குப் பிறகு லட்சக் கணக்கான மக்கள் [தங்கள் வீடுகளில் இருந்து வெளியே வேண்டியிருந்தது. இன்றும்கூட இந்த மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இதில் அவர்கள் செய்த தவறு என்ன? அந்த மக்களுக்கு உதவ வேண்டியது நமது தார்மீக கடமை, எந்த மதம், மொழிகளுடனும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், எவர் ஒருவர் ஆதிக்கம் செலுத்த முயல்கிறாரோ அப்போது தான் பிரச்சினை வருகிறது.

என்ஆர்சி எதற்கு
என்ஆர்சி என்பது யாரெல்லாம் நம் நாட்டின் குடிமகன் என்பதைக் கண்டறிய ஒரு முறை. இது எந்த குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரானது அல்ல. அரசியலுக்காக மட்டும் இது அப்படிப் பயன்படுத்தப்படுகிறது. இதை அவர்கள் இதை ஒரு இந்து-முஸ்லீம் பிரச்சினையாக மாற்ற முயல்கின்றனர். ஆனால் உண்மையில் இது இந்து-முஸ்லீம் பிரச்சினையே இல்லை. ஒருவர் அரசியலமைப்பின் கடமைகளைப் பின்பற்றாமல் உரிமைகளை மட்டும் கேட்கும்போது தான் அனைத்து பிரச்சினையும் வருகிறது.

இந்திய நாகரிகம்
மதச்சார்பின்மை, சோசலிசம் மற்றும் ஜனநாயகம் பற்றி உலக நாடுகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. இது நமது பாரம்பரியத்திலேயே உள்ளது. ஒட்டுமொத்த உலகமே ஒரே குடும்பம் என்பது தான் நமது பாரம்பரியம். ஒருவர் எந்த மொழியானாலும், எந்த மதமானாலும் அதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. இங்கு மொழிகளாலும் வாழ்க்கை முறைகளினாலும் வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவின் நாகரிகம் அனைத்தையும் உள்ளடக்கியது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications