விவசாயிகள் ஓராண்டாக காத்திருந்தனரே.. பிரதமரால் 15 நிமிடம் பொறுக்க முடியவில்லையா?.. சித்து சுளீர்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று சுமார் 42,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். மோசமான வானிலை காரணமாக பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லாமல் சாலை மார்க்கமாக சென்றார்.
பதிண்டா என்ற இடத்தில் சென்றபோது விவசாயிகள் அந்த பகுதியில் மறியலில் ஈடுபட்டதால் பிரதமர் வாகனம் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால பதிண்டா பகுதி மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் காண்வாய் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது.

பாதியில் திரும்பிய பிரதமர் மோடி
இந்த பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தான் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார். பிரதமர் சாலை வழியாக பயணிக்கும்போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த தவறி விட்டது என்று குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பஞ்சாப் அரசு விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பஞ்சாப் முதல்வர் மறுப்பு
உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பிரதமரின் பாதுகாப்பு குறைபாட்டுக்கு பஞ்சாப் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி '' பிரதமர் மோடி விமானம் மூலம் வருவதாக முதலில் திட்டமிட்டிருந்தார், ஆனால் எங்களுக்கு தெரிவிக்காமல் சாலை வழியாக வந்தார். ஆனாலும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றார்.

உள்துறை அமைச்சகம் விசாரணை
பஞ்சாப்பில் என்ன நடந்தது? என்பது குறித்து பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த விசாரணை குழுவை பஞ்சாப் அரசு அமைத்துள்ளது. மேலும் பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. இந்த நிலையில் டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டு காத்திருந்தனர். உங்களால் வெறும் 15 நிமிடங்கள் பொறுக்க முடியவில்லையா? என்று பிரதமர் மோடிக்கு பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

நவ்ஜோத் சிங் சித்து கேள்வி
இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினரும், காங்கிரசும் ஒருவரையொருவர் வார்த்தை போரில் ஈடுபட்டு வரும் நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த நவ்ஜோத் சிங் சித்து, ' 'பஞ்சாப் விவகாரம் தொடர்பாக மாநில அரசை குற்றம்சாட்டுவது நியாயம் இல்லை. ஃபெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு மிகக்குறைந்த அளவிலேயே தொண்டர்கள் வந்திருந்ததாலேயே பிரதமர் மோடி திரும்பிச் சென்றார்.

15 நிமிடங்கள் காத்திருக்க முடியாதா?
டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டு முகாமிட்டிருந்தனர். தங்கள் உரிமைக்காக போராடினார்கள். அப்போதெல்லாம் ஊடகங்கள் ஏன் வாய் திறக்கவில்லை? விவசாயிகள் ஓராண்டு காத்திருந்தபோது பிரதமர் மோடியால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு'' என்று நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications