கர்நாடகா தேர்தல்:போட்டியிட வாய்ப்பு வேண்டுமா? விண்ணப்பத்துடன் ரூ.2 லட்சம் கேட்கும் காங்கிரஸ்.. ஏன்?
டெல்லி: கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.2 லட்சத்துடன் விண்ணப்பம் செய்ய வேண்டும் எனவும், ஒருவேளை வாய்ப்பு கிடைக்காவிட்டால் வேறு வேட்பாளரை எதிர்த்து போட்டியிடக்கூடாது எனவும் எழுதி உறுதிமொழி வாங்கப்படும் என்கிற பரபர தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போது பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பசவராஜ் பொம்மை உள்ளார்.
கர்நாடகா சட்டசபையின் ஐந்தாண்டு ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகாவில் சட்டசபை தொகுதிகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

7 மாதத்தில் தேர்தல்
இதனால் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதனால் பாஜக அரசு தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை பாஜக அரசு வகுத்து வருகிறது. இதேபோல் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும், அவரது மகனும் கர்நாடகா முன்னாள் முதல் அமைச்சருமான குமாரசாமியும் தங்களின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி கர்நாடகா தேர்தலில் சாதிக்கும் நோக்கில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டங்களை வகுத்து வருகிறது.

150 தொகுதிகளுக்கு காங்கிரஸ் குறி
குறிப்பாக காங்கிரஸ் கட்சியும் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் கர்நாடகாவில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடந்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தொடர்ந்து காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பணியை துவங்கி உள்ளது. எப்படியாவது பாஜகவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை பிடிக்க கர்நாடகா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட ஏராளமானவர்கள் விரும்புகின்றனர். இதனால் யாருக்கு சீட் கொடுப்பது என்பது கட்சி மேலிடத்துக்கு பெரும் சிரமாக நிச்சயம் இருக்கும்.

விண்ணப்பம் செய்ய அழைப்பு
இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளத. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்வம் இருந்தால் போட்டியிட முடியும். இதற்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்ப கட்டணமாக ரூ.5 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ரூ.5 ஆயிரம் செலுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பம் செய்ய வேண்டும்.

ரூ.2 லட்சம் டிடி இணைப்பு
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கும்போது காங்கிரஸ் உறுப்பினராக இருக்கும் விபரங்களுடன் ரூ.2 லட்சம் டிடி எடுத்து கொடுக்க வேண்டும். அதன்பிறகு தொகுதி வாரியாக விண்ணப்பங்கள் அதற்கான குழுவால் பரிசீலனை செய்யப்படும். அந்த குழு பரிந்துரையை தொடர்ந்து தகுதியானவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். இந்த விண்ணப்ப முறை என்பது காங்கிரஸ் முன்னாள் முதல்வர்கள், மாஜி அமைச்சர்கள், தற்போதைய எம்எல்ஏக்கள் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைவருக்கும் பொருந்தும்.

உறுதிமொழி அவசியம்
மேலும் இந்த விண்ணப்பத்தின்போது ஒவ்வொருவரும் உறுதிமொழி ஒன்றையும் விண்ணப்பத்தில் வழங்க வேண்டும். அதாவது தான் விரும்பும் தொகுதியில் போட்டியிட ஒருவேளை வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சி சார்பில் இன்னொருவர் களம் இறங்குவார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிடமாட்டேன் என்பதை விண்ணப்பத்தாரர்கள் ஒவ்வொருவரும் உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

ரூ.2 லட்சம் ஏன்?
இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் கூறுகையில், ‛‛இந்த விண்ணப்ப படிவம் நேற்று முதல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. வரும் 15ம் தேதி வரை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.5 ஆயிரமாகும். அதுதவிர பொதுப்பிரிவினர் ரூ.2 லட்சம் டிடி எடுத்து விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு 50 சதவீத சலுகை வழங்கப்படும். அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1 லட்சத்துக்கான டிடியை இணைக்க வேண்டும். இது கட்சி செயல்பாடு, கட்டடம் கட்டுதல், தேர்தல் பிரசாரம், விளம்பரம் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தபடும்'' என்றார்.












Click it and Unblock the Notifications