அதிரடி முடிவு! சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் மீடியம்.. 22 இந்திய மொழிகளில் பயிற்றுவிக்க CBSE அனுமதி!
டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளின் வழியில் பயிற்றுவிக்க சிபிஎஸ்இ அனுமதி வழங்கி உள்ளது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை விருப்பப் பயிற்று மொழியாகப் பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்குமாறு பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகள் பயிற்று மொழியாக உள்ளன. தமிழ்நாட்டில் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்ற கொள்கையின்படி, கடந்த கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், இந்தியாவில் பன்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் ஆங்கிலம், இந்திக்கு அடுத்து தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளில் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில், புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை உயர்கல்வித் துறை செயல்படுத்தத் தொடங்கியுள்ள நிலையில் பன்மொழிக் கற்பித்தலுக்கு பள்ளிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதன்படி, மழலையர் பள்ளி முதல் 12ஆம் வகுப்பு வரை இந்திய மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இளம் மாணவர்களுக்கான பன்மொழி அறிவின் முக்கியத்துவத்தையும் அறிவாற்றல் நன்மைகளையும் புதிய கல்விக்கொள்கை வலியுறுத்துகிறது. பன்மொழிக் கல்வியை நடைமுறைப்படுத்துவதும், தாய்மொழியைப் பயிற்றுவிப்பதும், பன்மொழி அமைப்புகளில் கற்பிக்கும் திறன் வாய்ந்த ஆசிரியர்களை சேர்த்தல், உயர்தர பன்மொழிப் பாடப்புத்தகங்களை உருவாக்குதல் உள்ளிட்டவை அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உட்பட 22 மொழிகளில் பாடப்புத்தகங்களை தயாரிக்கும் பணிகள் NCERT மூலம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு இந்திய மொழிகளில் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ இயக்குநர் ஜோசப் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இயின் இந்த முடிவு குறித்து பாராட்டியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் "பள்ளிகளில் தாய்மொழி மற்றும் இந்திய மொழிகளில் கல்வி கற்பதை ஊக்குவிப்பதில் இது ஒரு பாராட்டுக்குரிய நடவடிக்கை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications