இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம்.. 20 பாக். யூடியூப் சேனல்களுக்கு.. தடை போட்ட மத்திய அரசு
டெல்லி: ஆன்லைனில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வந்த பாகிஸ்தானை 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் இணையத்தில் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வந்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.
தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கியமான விஷயங்கள் தொடர்பாக இவர்கள் இணையத்தில் தொடர்ந்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததாகப் பரவலான குற்றச்சாட்டுகள் இருந்தன.

20 யூடியூப் சேனல்கள் முடக்கம்
இந்தச் சூழலில் இணையத்தில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறி 20 யூடியூப் சேனல்களையும் 3 இணையதளங்களையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. மத்திய ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுள் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்புக்குத் தொடர்பான விஷயங்களில் தொடர்ந்து பொய்யான கருத்துகளைப் பரப்பி வந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு
இது தொடர்பாக மத்திய அரசு கூறுகையில், "இந்த யூடியூப் சேனல்களும் இணையதளங்களும் போலியான தகவல்களை பரப்புவதற்கென உள்ள பாகிஸ்தானில் இருந்து செயல்படும் நெட்வோர்க்குகளை சேர்ந்தவை. இந்தியா தொடர்பான பல முக்கிய விஷயங்கள் குறித்து போலி செய்திகளைப் பரப்புகின்றன. காஷ்மீர், இந்திய ராணுவம், சிறுபான்மையினர், ராமர் கோயில், ஜெனரல் பிபின் ராவத் குறித்துப் பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை இவர்கள் பகிர்ந்து வந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அனுராக் தாக்கூர்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், "இந்தியாவுக்கு எதிரான போலி செய்திகளைப் பரப்புவதன் மூலம் இங்கே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்த வெளிநாட்டுச் சக்திகள் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐடி விதிகளின் கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுபோன்ற சக்திகள் செயல்படாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

பாகிஸ்தான் அமைப்பு
பாகிஸ்தானைச் சேர்ந்த நபர்களைக் கொண்டு நயா பாகிஸ்தான் என்ற குழு இதை செய்து வருகிறது. அவர்களுக்குக் கீழ் மட்டும் 15 யூடியூப் சேல்கள் செயல்படுகின்றன. இந்த சேனல்களுக்கு மொத்தம் 35 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளனர். மேலும், அவர்களின் வீடியோக்கள் 55 கோடிக்கு மேற்பட்ட வியூஸ்களை பெறுகின்றன. இவர்கள் வெளியிடும் வீடியோக்கள் இந்தியாவுக்கு எதிரான பொய்யான கருத்துகளைப் பரப்பும் வகையில் உள்ளது விசாரணையில் உறுதியாகியுள்ளது.

5 மாநில தேர்தல்கள்
விவசாயிகள் போராட்டம், ராமர் கோயில் விவகாரம், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் முப்படை தளபதி பிபின் ராவத்தின் மரணம் போன்றவற்றைக் குறிவைத்து போலிச் செய்திகள் இவர்கள் பரப்பி வருகின்றனர் இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் ஜனநாயக செயல்முறைக்கு அச்சுறுத்தல் விளைவிக்க வாய்ப்புள்ளது என்றும் இதன் கரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அமலுக்கு வந்த புதிய ஐடி சட்டத்தின் கீழ் மத்திய அரசு எடுக்கும் முதல் நடவடிக்கை இதுவாகும்.












Click it and Unblock the Notifications