18+ வயதுள்ளவர்களுக்கு குட் நியூஸ்..தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்.. எப்படி பதிவு செய்யணும் தெரியுமா?
டெல்லி: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்படும் நிலையில் மாலை 4 மணி முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத் தாண்டவமாடி வருகிறது. உலக அளவில் கொரோனா தினசரி பாதிப்பிலும், தினசரி உயிரிழப்பிலும் இந்தியா தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.
ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!
தமிழ்நாடு, கேரளா, மகாரஷ்டிரா, டெல்லி என ஏறக்குறைய பாதிப்பு அதிகம் இல்லாத மாநிலங்களே இல்லை என்று கூறலாம். ஒரு பக்கம் தொற்று அதிகரித்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி எனும் பேராயுதம்
இது தவிர நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மிகக் கடுமையாக இருப்பதால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, வர இறுதி நாட்கள் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. கோவோக்சின், கோவிஷில்டு என 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி
முதல் கட்டமாக மருத்துவம் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அடுத்ததாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் வருகிற மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எப்படி பதிவு செய்வது?
இதனால் தடுப்பூசி போடுவதற்காக ஏராளமானவர்கள் தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் குவிய வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ தடுப்பூசி மையங்களுக்கோ செல்ல COWIN என்ற இணையதளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
மே 2-ஆம் தேதி முதல் தடுப்பூசி போடுவதற்கான விருப்பம் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்வதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று மிக அவசியம். செல்போன் நம்பரை பயன்படுத்தி பதிவு செய்துகொள்ளலாம். ஒரு செல்போன் நம்பரில் நான்கு பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனி புகைப்பட அடையாள அட்டைகள் அவசியம். பதிவு செய்யும்போது தங்களுக்கு மிக அருகில் எங்கு தடுப்பூசி மையங்கள் உள்ளது? அவற்றில் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதா? என்பதை அறிந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு தொடங்கியது
இந்த நிலையில் இன்று காலை முதல் முன்பதிவு செய்யலாம் என அரசு அறிவித்ததால் பலரும் கொரோனா தடுப்பூசிக்காக CoWin என்ற செயலியில் முன்பதிவு செய்ய ஆரம்பித்தபோது அவர்களால் முன்பதிவு செய்ய முடியவில்லை. அனைத்து தகவல்களும் நிறைவு செய்தபிறகு கடைசியில் பதிவு செய்யும்போது error என்று காட்டியதால் பலரும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் இன்று மாலை 4 மணி முதல் CoWin செயலியில் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. பலரும் தடுப்பூசிக்கு பதிவு செய்து வருகின்றனர். எனவே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மறக்காமல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யுங்க. கொரோனாவில் இருந்து நம்மையும் காப்போம், நம்மை சுற்றி உள்ளவர்களையும் காப்போம்.