அப்பாடா.. மத்திய அரசு போட்ட யூ-டர்னால் ரூட் கிளியர்! இனி குழப்பம் இல்லாமல் தடுப்பூசி கிடைக்கும்
டெல்லி: மத்திய அரசு தனது கொரோனா தடுப்பூசி திட்டத்தை நேற்று மீண்டும் ஒருமுறை மாற்றியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது தொலைக்காட்சி உரையில் இதை தெரிவித்தார்.
மாநிலங்கள் இனி வாக்சின் கொள்முதல் செய்ய வேண்டாம், மத்திய அரசே 75 சதவீத வாக்சின்களை இலவசமாக வழங்கும் என மோடி அறிவித்தார். புதிய வாக்சின் கொள்கை, ஜூன் 21ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதுவரை மத்திய அரசு வாக்சின் திட்டத்தில் 3 முறை மாற்றங்களைச் செய்துள்ளது. ஒரு வழியாக இப்போதுதான் ஒரு தெளிவான பாதை கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள் மருத்துவத்துறை நிபுணர்கள்.
தெளிவு கிடைக்கும்
புதிய தடுப்பூசி கொள்கை பல தெளிவு பிறக்க காரணமாகியுள்ளது. முதலில், எங்கேயிருந்து வாக்சின் கிடைக்கும், எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பது தெளிவாகியுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை 94 கோடி. எனவே அவர்களுக்கு 188 டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. இதில் இதுவரை 23 கோடி டோஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதிக்குள் 187.2 கோடி டோஸ் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்பது இப்போதைய டார்கெட்.
எதிர்பார்க்கும் அளவு
ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 31 வரை தோராயமாக 133.6 கோடி டோஸ்கள் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், தினமும் சுமார் 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உள்ளது.
சப்ளை குழப்பம் இல்லை
கடந்த ஒரு மாதத்தில் மாநிலங்கள் தடுப்பூசிகளை வாங்க போராடின. அவற்றில் பல உலகளாவிய டெண்டர்களை கோரின. ஆனால், அப்படி டெண்டர் விட்டாலும் தடுப்பூசி கம்பெனிகள் மாநிலங்களுக்கு சப்ளை செய்யுமா என்பதில் குழப்பம் இருந்தது. ஆனால் மத்திய அரசே அனைத்தையும் கையில் எடுத்துள்ளதால் இதிலும் குழப்பம் தீர்ந்துள்ளது.
எந்த நிறுவனம் எத்தனை டோஸ்
ஜூலை முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) 50 கோடி ஷாட்களையும், பாரத் பயோடெக் 38.6 கோடியும், பயோ-இ 30 கோடியும், ஜைடஸ் காடிலா ஐந்து கோடியும் வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 10 கோடி டோஸ் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியும் கிடைக்கப்போகிறது. இந்த 133.6 கோடியில் வெளிநாட்டு தடுப்பூசிகள் கணக்கு இல்லை. அவையும் வர வாய்ப்பு உள்ளது. அப்போது இன்னும் டோஸ்கள் அளவு கூடும்.
விலை மாறுபாடு இல்லை
மே மாதத்தில் நடைமுறைக்கு வந்த வேக்சின் வழிகாட்டுதல்கள் 2.0 அதாவது 2வது மாற்றம், தடுப்பூசி விலைகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை இப்போது தீர்க்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை, 53.6 கோடி தடுப்பூசிகளும் முன்பை போல ஒரு டோஸ் ரூ .150 என்ற வகையில் செலவாகும். ஜூலை 31 க்குப் பிறகு, நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால் தலைமையிலான சிறப்புக் குழு தடுப்பூசிகளுக்கான விலையை குறைக்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. தடுப்பூசிகளுக்கு இந்தியா செலுத்தும் ஒட்டுமொத்த விலையை இது குறைக்கும்.
பழைய VS புதிய வழிகாட்டுதல்கள்
தடுப்பூசி வழிகாட்டுதல்கள் 2.0, அதாவது 2வதாக வெளியிடப்பட்ட கொள்கைகள், கொள்முதல் செய்ய மாநிலங்களை கட்டாயப்படுத்தின. இப்போது, மாநிலங்களின் தடுப்பூசி ஒதுக்கீட்டை உற்பத்தியாளர்களிடமிருந்து மத்திய அரசு வாங்கப்போகிறது. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50% தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கிக் கொண்டிருந்தது, அதே நேரத்தில் மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தலா 25% எடுத்துக்கொண்டன. இப்போது, கிடைக்கும் 75% பங்குகளை மத்திய அரசு, வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும்.
அனைவருக்கும் இலவசம்
முன்னதாக, நாடு முழுவதும் 45+ வயது மற்றும் முன்கள மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியது. இப்போது, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அனைத்து அரசு மையங்களிலும் இலவச தடுப்பூசிகள் கிடைக்கும். இருப்பினும், விரும்புவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் காசு கொடுத்து தடுப்பூசி போடலாம்.
தனியார் பங்களிப்பு அவசியம்
தனியார் மருத்துவமனைகளுக்கு 25% தடுப்பூசிகளை வழங்க அனுமதிப்பதன் மூலம், பொது சுகாதார அமைப்பு மீதான அழுத்தத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்துள்ளது. சேவை கட்டணமாக ரூ .150 மட்டுமே வாங்க வேண்டும் என தனியார்களுக்கு மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதோடு, தனியாருக்கு ஓரளவு லாபம் ஈட்டும் வாய்ப்பை கொடுத்து அவர்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லைனில் நிற்கும் மருந்துகள்
ஜெனோவா தடுப்பூசி மற்றும் பாரத் பயோடெக்கின் மூக்கு ஸ்ப்ரே ஆகியவற்றின் சோதனை அறிக்கைகளுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது, அதே நேரத்தில், ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் மற்றும் ஜான்சன் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இவையும் ஓகேயானால் டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கு பூர்த்தியாகும் என எதிர்பார்க்கலாம்.