பிபின் ராவத் மறைவு- அடுத்த 10 நாட்களுக்குள் புதிய முப்படை தலைமை தளபதி நியமனம்!
டெல்லி: நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவ்த் தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து புதிய முப்படைகளின் தலைமை தளபதி அடுத்த 10 நாட்களுக்குள் நியமிக்கப்பட இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் இருந்து நீலகிரி வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு ராணுவ ஹெலிகாப்டரில் பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 அதிகாரிகளுடன் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே மலைமுகட்டில் மரத்தின் மோதி கீழே விழுந்து நொறுங்கியது.

பிபின் ராவத் உயிரிழப்பு
இவ்விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த விபத்து பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் உடல் நாளை டெல்லியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஆலோசனை
இதனிடையே நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமனம் குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் புதிய முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்பட உள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின நாளில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, முப்படைகளின் தலைமை தளபதி என்ற புதிய பதவி உருவாக்கப்படுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

புதிய தளபதி யார்?
ராணுவ தளபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிபின் ராவத், நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதியாக 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். ராணுவ, விமானப் படை, கப்பற்படை ஆகியவற்றின் மூன்று தளபதிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுகிற வகையில் முப்படைகளின் தலைமை தளபதி உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் தற்போதைய ராணுவ தளபதிகளில் ஒருவர் அடுத்த முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் இன்று ராஜ்நாத்சிங் விளக்கம்
இந்நிலையில் பிபின் ராவத் உயிரிழப்பு தொடர்பாக இன்று லோக்சபாவில் காலை 11.15 மணிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு ராஜ்யசபாவிலும் ராஜ்நாத்சிங் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக நேற்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பிபின் ராவத் மறைவு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications