டெல்லி கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள்- பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு: அமித்ஷா
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழகத்தைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருகிறது.

டெல்லியில் கொரோனா மரணங்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனும் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, டெல்லியில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்க மிக முக்கியமான முடிவுகள் இன்றை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட தேவையான அனைத்தும் டெல்லி அரசுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.

டெல்லியில் சிறு மருத்துவமனைகளுக்கான வழிகாட்டுதல்கள் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான உதவி எண்களும் நாளை அறிவிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஆரோக்யா சேது ஆப் ஒவ்வொருவரது மொபைல் போனிலும் டவுன்லோடு செய்யப்பட வேண்டும்.
டெல்லியில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகளாக 500 ரயில் பெட்டிகள் உடனடியாக வழங்கப்படும். டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் 2 மடங்கு, 3 மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications