ஓமிக்ரான் அச்சம்.. தமிழகம் உட்பட 10 மாநிலங்களுக்கு விரைந்த சிறப்பு குழு.. என்ன காரணம்? பரபர தகவல்
டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த நவ. மாதம் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய நிலைமையை அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே பரவியுள்ளது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

சிறப்புக் குழு
ஒமிக்ரான் மற்றும் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் மாநிலங்கள் அல்லது கொரோனா தடுப்பூசி பணிகள் மெதுவாக நடைபெறும் 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு வல்லுநர் குழுவை அனுப்பியுள்ளது. அதன்படி தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, மே வங்கம், மிசோரம், கர்நாடகா, ஜார்கண்ட மாநிலங்களுக்கு விரைந்தது சிறப்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் மாநிலங்கள்
அதேபோல விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன் தினம் தான், கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்தி வைக்குமாறு பிரதமர் மோடி மற்றும் தேர்தல் ஆணையத்திடம் அலகாபாத் உயர் நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

என்ன பணி
மத்திய அரசின் இந்த குழுக்கள் ஐந்து நாட்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஆய்வுகளைச் செய்வார்கள். அங்கு அவர்கள் சோதனை மற்றும் கண்காணிப்பை மேம்படுத்தி, கொரோனா கட்டுப்பாடுகளை முறையாகச் செயல்படுத்த உதவுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல வேக்சின் பணிகளை மேற்பார்வையிடும் இந்தக் குழு, மருத்துவமனைகள் உள்கட்டமைப்பை ஆய்வு செய்வார்கள்.

கண்காணிப்பு
மேலும், ஓமிக்ரான் கேஸ்கள் தொடர்பாக மரபணு வரிசைமுறை சோதனையையும் இந்தக் குழு கண்காணிக்கும். ஓமிக்ரான் கொரோனா டெல்டாவை காட்டிலும் குறைந்தது 3 மடங்கு வேகமாகப் பரவும் ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மாநிலங்களில் ஆய்வுகளைச் செய்யும் சிறப்புக் குழுக்கள், இது தொடர்பான தகவல்களை மத்திய அரசுக்கு உடனடியாக வழங்கும்.

ஓமிக்ரான்
இந்தியாவில் இதுவரை 415 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 108 பேருக்கும் கேரளாவில் 37 பேருக்கும் ஓமிக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகிவ்ல 31 பேருக்கும் தமிழ்நாட்டில் 34 பேருக்கும் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பாதிப்பு தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும் அது வேகமாகப் பரவும் ஆற்றல் காரணமாக பல ஆய்வாளர்களும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு கடிதம்
ஏற்கனவே, கடந்த புதன்கிழமை அனைத்து மாநில அரசுகளுக்கு கொரோனா நிலைமை குறித்து மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. அதில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், தேவைப்படும்பட்சத்தில் இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications