2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்: டிக்டாக்
டெல்லி: இந்தியாவில் பணிபுரியும் தங்களது 2,000க்கும் மேற்பட்ட பணியாளர்களின் வாய்ப்புகளையும் நலனையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று டிக்டாக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சீனாவின் அத்துமீறிய தாக்குதலைத் தொடர்ந்து அந்த நாட்டின் 59 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடிதடை விதித்தது. இதில் டிக்டாக் செயலியும் (ஆப்) ஒன்று.
தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அதன் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பேட்டி என்ற பெயரில் அமைச்சர்கள் "பிதற்ற" வேண்டாம்.. திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சாடல்
இந்தியாவில் துரதிருஷ்டவசமான சிக்கல்
டிக்டாக் செயலியைப் பொறுத்தவரையில் இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கத்தில் வெற்றிகரமாகவே செயல்படுத்தி வந்தோம். தற்போது இந்தியாவில் டிக்டாக் செயலி செயல்படுவதற்கு துரதிருஷ்டவசமான சிக்கல் எழுந்துள்ளது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொண்டு வருகிறோம். இந்திய சட்டங்களுக்குட்பட்டு பயனாளர் விவரம், பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட அனைத்திலும் டிக்டாக் செயலி அக்கறைகாட்டி வருகிறது.
இந்தியாவில் 20 கோடி பயனாளர்கள்
2018-ம் ஆண்டு முதல் இந்தியாவில் டிக்டாக் செயலியானது 20 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கிறது. பயனாளர்கள் தங்களது உணர்வுகளை, திறமைகளை சர்வதேச உலகின் வெளிப்படுத்தக் கூடிய வாய்ப்பை டிக்டாக் செயலி உருவாக்கிக் கொடுத்தது. டிக் டாக் செயலி மூலம் பல லட்சக்கணக்கானோர் தங்களது வெளிவராத திறமைகளை பகிரங்கப்படுத்தினர். இதன்மூலம் அவர்களது வாழ்வாதாரமும் மேம்பட்டிருந்தது.
சமூகம் சார் நடவடிக்கைகள்
இதனால் ஒருகட்டத்தில் சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களுக்கு என தனி செயலியை உருவாக்கும் திட்டமும் இருந்தது. இப்போது இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள் என அனைத்திலும் டிக்டாக் செயலி சென்றடைந்திருக்கிறது. மேலும் யுனிசெப், யுனிடிபி போன்ற சர்வதேச அமைப்புகளுடனும் இணைந்தும் டிக்டாக் செயலி சமூக விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் பங்கேற்றது. நம்முடைய பணியாளர்கள்தான் நமக்கு மிகப் பெரும் பலம்.
வாய்ப்புகளை பாதுகாப்போம்
2,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டிருக்கும் நாம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவே பயணிப்போம். இந்த பணியாளர்களின் நலனையும் வாய்ப்புகளையும் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். டிஜிட்டல் இந்தியாவுக்கான ஆக்கப்பூர்வமான நமது பங்களிப்பை தொடர்ந்து வழங்குவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,