மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி.. பலம் பெறும் மாநில கட்சிகள்.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ்டர் பிளான்
Recommended Video

டெல்லி: 'எத்தை தின்றால் பித்தம் குறையும்' என்ற நிலைமையில் உள்ளது காங்கிரஸ் கட்சி. 5 ஆண்டுகால அபார பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளில், ஒன்றிணைந்துள்ளன எதிர்க்கட்சிகள்.
பரபரப்பான அரசியல் நகர்வுகளை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது இந்திய அரசியல்.
தேசிய அளவில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜகவை தோற்கடித்தே தீருவேன், என்று சபதம் செய்ததுபோல், சூறாவளியாக கிளம்பியுள்ளார் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான, சந்திரபாபு நாயுடு.
இதுவரை 90 விழுக்காட்டுக்கும் மேல், எதிர்க்கட்சிகளை ஆனது முயற்சியின் மூலம் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து விட்டார் சந்திரபாபு நாயுடு. அதன் லேட்டஸ்ட் திமுக.

சந்திரபாபு நாயுடுவின் பயணங்கள்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை, நேற்று சென்னையில், அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார் சந்திரபாபு நாயுடு. அப்போது, மெகா கூட்டணியில் தாங்களும் இணைவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் ஸ்டாலின். பெங்களூரில், மதசார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகவுடாவை சந்தித்து பேசி அவரது ஒப்புதல் பெற்ற அடுத்த நாள், 350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு.

அரசியல் சாணக்கியர்
ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியால், மோடியை முன்னிறுத்தி களம் புகும், பாரதிய ஜனதா கட்சியை தனியாக சந்திக்க முடியாது என்ற அரசியல் நிதர்சனத்தை சரியாக புரிந்து கொண்டு, உரிய நேரத்தில் காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டார் தென்னிந்தியாவின் இப்போதைய அரசியல் சாணக்கியர் சந்திரபாபு நாயுடு. இதற்கு முன்பு, பல கூட்டணிகளை கட்டி எழுப்பி அதை வெற்றி கூட்டணியாக மாற்றிய அனுபவம் சந்திரபாபு நாயுடு மீதான நம்பகத்தன்மையை, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது.

கூட்டணி ஆட்சி நன்மைகள்
தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்தாலும் கூட, பாஜக என்ன நினைக்கிறதோ அதை செய்யக்கூடிய வலிமை மத்திய அரசுக்கு உள்ளது. இந்த வலிமைதான் பல நேரங்களில் நாட்டை அபாயகரமான வழிக்கு இட்டுச் சென்றது. குழு வன்முறைகள், பிறமதத்தவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி, சாதிய ஒடுக்குமுறைகள் ஆகியவை வளர்ந்து செல்ல, தனிப்பெரும்பான்மை பலமும் ஒரு காரணமாக அமைந்தது. எனவே, மாநில கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி மீண்டும் மலர்வதுதான், இந்திய ஜனநாயகத்தையும், ஒருமைப்பாட்டையும் மீட்டெடுக்க உதவும். இந்தி திணிப்பை அகற்ற உதவும், அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை நிலைக்கும், பணமதிப்பிழப்பு போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற கருத்துக்கு, பெரும்பான்மை அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் வந்துவிட்டனர்.

காங்கிரஸ் நிலை
அரசியல் நோக்கர்கள் கருத்துபடி, காங்கிரஸ் கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்ற போதிலும், இந்த மெகா கூட்டணி உதவியுடன் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வரும்போது, கூட்டணி கட்சிகள் கூறுவதையும் காங்கிரஸ் கேட்டுத்தான் ஆகவேண்டும். தனி ஆவர்த்தனம் நடத்த முடியாது. இது மாநில கட்சிகளுக்கு பலத்தை கொடுத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறும். சந்திரபாபு நாயுடுவின் இந்த முயற்சி நாட்டை மீண்டும் கூட்டணி ஆட்சிக்கு அழைத்து செல்லும் என்று அடித்துக் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications