ஒரே மசோதா... 200 முறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பு - களைத்துப்போன மாநிலங்களவை துணை சபாநாயகர்
டெல்லி: மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள் சட்டத்திருத்த மசோதா மீது 200க்கும் மேற்பட்ட முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2 வது அமர்வு இரு அவைகளிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் மத்திய பாஜக அரசு பல்வேறு சட்டத் திருத்தங்களை கொண்டு வந்து இரு அவைகளிலும் நிறைவேற்றி வருகிறது.

2.20 மணி நேரம் உரையாற்றி நிர்மலா
அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில், பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், அலுவலக செயலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, 2022-ஐ அறிமுகம் செய்தார். இதன் மீதான வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு கடந்த மார்ச் 30 ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதத்திற்கு வந்தது. அதன் மீது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் உரையாற்றினார்.

திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் அவையில் மசோதா குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. அப்துல் வஹாப், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கே.ரவீந்திர குமார் உள்ளிட்டோரும் மசோதாவுக்கு எதிரான கருத்துக்களை அவையில் முன்வைத்தனர்.

மொத்தம் 200க்கும் மேற்பட்ட திருத்தங்கள்
மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, அதன் உட்பிரிவுகளை சுட்டிக்காட்டி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜாம் பிரிட்டாஸ் 163 திருத்தங்களை கொண்டு வந்து நோட்டீஸ் கொடுத்தார். அதாவது மசோதாவில் உள்ள பெரும்பாலான உட்பிரிவுகளில் திருத்தத்தை அவர் நாடினார். அவரைபோல் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் 20 உட்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்தார். இப்படி மொத்தம் 200-க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மாநிலங்களவை உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன.

களைத்துப் போன துணை சபாநாயகர்
இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குரல் வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டு வந்த இந்த மசோதாவுக்கு எம்.பிக்கள் கொண்டு வந்த 200-க்கும் மேற்பட்ட திருத்தங்களையும் உட்பிரிவுகளையும் வாசித்து குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்குள் மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் களைத்தே போய்விட்டார். இறுதியாக பட்டயக் கணக்காளர்கள், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், அலுவலக செயலாளர்கள் சட்டத்திருத்த மசோதா, 2022-ஐ நிறைவேற்றப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு மசோதா
இந்த குரல் வாக்கெடுப்புகளுக்காக மட்டும் 30 நிமிடங்களுக்கு மேல் நேரம் செலவிடப்பட்டது. இது இந்த மசோதாவை தாக்கல் செய்ய எடுத்துக் கொண்ட நேரத்தில் 18% ஆகும். நாடாளுமன்ற மாநிலங்களவையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஏராளமான உட்பிரிவுகளை கொண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏராளமான திருத்தங்களுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், நீண்ட நேரம் வாக்கெடுப்புக்கு செலவிடப்பட்டதாகவும் மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications