தடுப்பூசியில் முன்னுரிமை தேவை.. இல்லையென்றால் கடைகளை அடைத்துவிடுவோம். மருந்து வணிகர்கள் எச்சரிக்கை
டெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் மற்ற வணிகர்களைப் போல கடைகளை அடைத்துவிடுவோம் என அகில இந்திய மருந்து வணிக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் தற்போதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் 2.57 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே ஒரே வழி என்றும் இதனால் தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் ஒருபுறம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபுறம் தொடர்ந்து குறையும் தடுப்பூசி பணிகள்..காரணம் என்ன
அகில இந்திய மருந்து வணிக அமைப்பு
இந்நிலையில், நாடு முழுவதும் இருக்கும் 9 லட்சம் மருந்து வணிகர்கள் சார்பில் அகில இந்திய மருந்து வணிக அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்களைப் போல தங்களுக்கும் தடுப்பூசி பணிகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் இல்லையென்றால் கடைகளை அடைத்துவிடுவோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
650 மருந்து வணிகர்கள் பலி
இது குறித்து மருந்து வணிகர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் உள்ள 9.40 லட்சம் மருந்து வணிகர்கள், ஊரடங்கு காலத்திலும் மக்களைக் காக்கத் தொடக்கம் முதலே பணியாற்றி வருகிறோம். ஆனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் நாங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். கடந்த மார்ச் மாதம் முதல் 650 மருந்து வணிகர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
முன்னுரிமை வேண்டும்
கொரோனா நோயாளிகளை நாங்கள் தொடர்ந்து சந்திக்கிறோம். ஆனாலும் எங்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவிக்கவில்லை. இதற்கு மேலும் மருந்து வணிகர்களை ஆபத்தில் தள்ள நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் வைக்கும் நிபந்தனை ஒன்று தான். நாட்டிலுள்ள 9.4 லட்சம் மருந்து வணிகர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். இல்லையென்றால் மற்ற வணிகர்களைப் போல நாங்களும் கடைகளை அடைத்து விடுவோம்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு கொள்கை
இந்தியாவில் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பாதுகாப்புப் படையினர், நகராட்சி ஊழியர்கள், வருவாய் அதிகாரிகள் ஆகியோருக்கு மட்டுமே தடுப்பூசி பணிகளில் அரசு சார்பில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல பிரிவினர் இதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.